நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்.. கேன்சர் டூ ENT வரை.. சென்னையில் முகாம்.. பைசா செலவில்லாமல் பரிசோதனை
சென்னை: பொதுமக்களுக்கு இலவச சிகிச்சையை வழங்கி வரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.. அந்தவகையில், சென்னையில் இன்று 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.. ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் இந்த முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
சாமானிய மக்களும் தரமான மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களைத் தேடி மருத்துவ ஆய்வகத் திட்டம், தொழிலாளர்களைத் தேடி மருத்துவத் திட்டம், சிறுநீரகம் பாதுகாக்கும் சீர்மிகு திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் போன்ற பல்வேறு சுகாதார திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்தவகையில், அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் மற்றொரு திட்டம்தான், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம். இந்த திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள், பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தமிழக அரசின் உயரிய நோக்கம்
தமிழகம் முழுவதும் 1256 நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம்களை நடத்தி, அனைத்து வயதினருக்கும், முக்கியமாக, ஏழை எளிய மக்களுக்கும் அதிநவீன பரிசோதனை சாதனங்கள் மூலம் நோய்களை கண்டறிந்து உடனடியாக இலவச சிகிச்சை தந்து அவர்களின் உயிரை காப்பாற்றி ஆரோக்கியத்துடன் வாழ வைப்பதே நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிலையில், இன்று சென்னையில் இம்முகாம் நடைபெற்ற உள்ளது.. ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளியில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாக கூறி சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
நலம் காக்கும் ஸ்டாலின்
"தமிழ்நாடு முதல்-அமைச்சர் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாமினைத் தொடங்கி வைக்கும் விதமாக, 02.08.20025 அன்று பெருநகர சென்னை மாநகராட்சியில் முதல் மருத்துவ முகாமினை தேனாம்பேட்டை மண்டலம், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மேலும் 14 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அதன் அடிப்படையில்,
23.08.2025 அன்று (சனிக்கிழமை) ஆலந்தூர் மண்டலம், ஏ.ஜெ.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாம்கள் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.
சிகிச்சைகள் என்னென்ன?
இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம், குழந்தை மருத்துவம், இருதயவில் மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், நுரையீரல் மருத்துவம், இந்தியமுறை மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம் மற்றும் ஸ்கேன் பரிசோதனை ஆகிய 17 சிறப்பு மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகள், அடிப்படை மற்றும் உயர்நிலை மருத்துவப் பரிசோதனை, முழுமையான உடல் ஆரோக்கிய பரிசோதனை, காசநோய், தொழுநோய் பரிசோதனை, ஆரம்ப புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை ஆகிய மருத்துவ சேவைகள் வழங்கப்படுகிறது.
அமைப்புசாரா தொழிலாளர்கள்
மேலும், முதல்-அமைச்சரின் விரிவாக மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்துவிழிப்புணர்வு பிரச்சாரம் போன்ற இணைச் சேவைகளும் வழங்கப்படுகிறது.
ஆலந்தூர் மண்டலத்தில் வரும் 23-ந்தேதி நடைபெற உள்ள 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications