ராஜீவ் காந்தி வழக்கு.. நளினி, ரவிச்சந்திரனை விடுதலை செய்ய முடியாது.. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய கோரி தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் வழக்கில் உத்தரவு போட்டது போல நாங்கள் விடுதலை உத்தரவை பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
இதே வழக்கில் பேரறிவாளன் கடந்த மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் விடுவிக்கப்பட்ட நிலையில் நளினி, ரவிச்சந்திரனை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை 2014ல் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது என்று கூறி இவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து 31 வருடம் சிறையில் இருந்துவிட்டதால், ஆயுள் தண்டனையில் இருந்து, தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்தார்.
நளினி, ரவிச்சந்திரன் விடுதலை செய்யப்படுவார்களா? - நாளை தீர்ப்பு.. வழக்கில் இதுவரை நடந்தது என்ன?
விடுதலை
அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலை செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்து வந்தது. இதே வழக்கில் பேரறிவாளன் கடந்த மாதம் 18ஆம் தேதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார். ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் கால தாமதம் செய்ததை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது. ஆளுநர் தனது கடமையை செய்ய தவறிவிட்டதாக கடுமையாக உச்ச நீதிமன்றம் விமர்சித்தது.
அதிகாரம்
தனக்கே உரிய பிரத்யேக அதிகாரமான சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. இந்த நிலையில் இதே வழக்கில் சிறையில் இருக்கும் தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி, ரவிசந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். தமிழ்நாடு அமைச்சரவை முடிவை ஆளுநர் ஏற்கவில்லை. அவர் தாமதம் செய்கிறார். அவர் இந்த முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது.
தவறு
அதனால் ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்காமல் எங்களை விடுதலை செய்ய வேண்டும். ஆளுநர் இதில் முடிவு எடுக்காத காரணத்தால், நீதிமன்றமே எங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி, ரவிசந்திரன் தரப்பு கோரிக்கை வைத்தது. இதில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், அமைச்சரவை முடிவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. நாங்கள் எடுத்த முடிவில் ஆளுநர் வெறுமனே கையெழுத்து மட்டுமே போட முடியும், என்று கூறியது.
பேரறிவாளன்
பேரறிவாளன் வழக்கில் வைக்கப்பட்ட அதே வாதங்களை இந்த வழக்கிலும் தமிழ்நாடு அரசு வைத்தது.
இந்த நிலையில் நளினி, ரவிச்சந்திரன் தரப்பில் தாக்கல் செய்த விடுதலை கோரிய மனுவில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் வழக்கில் உத்தரவு போட்டது போல நாங்கள் விடுதலை உத்தரவை பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில் நாங்கள் விடுதலை அளிக்கும்படி தீர்ப்பு அளிக்க முடியாது. அதனால் உங்கள் மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது.
பேரறிவாளன் வழக்கு வேறுபாடு
பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு வந்து சரியாக ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில்தான் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை கோரி தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தனக்கே உரிய பிரத்யேக அதிகாரமான சட்டப் பிரிவு 142ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது. ஆனால் உயர் நீதிமன்றத்திற்கு அந்த அதிகாரம் இல்லை என்பதால் நளினி, ரவிசந்திரன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.