கொலைகள் செய்தாலும் அகோரி சாமியார்கள் அரசியல் சாசனத்துக்கு மேலானவர்களா? என்ன சொல்கிறது அகண்டா சினிமா?
சென்னை: எத்தனை கொலைகள் செய்தாலும் அகோரி சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது; சிவபெருமானாகவே வாழும் அகோரி சாமியார்கள் அரசியல் சட்டத்துக்கும் மேலானவர்கள் என்பதை நடிகர் பாலகிருஷ்ணா நடித்துள்ள அகண்டா திரைப்படம் வலியுறுத்துவது விவாதப் பொருளாகி இருக்கிறது.
நந்தமூரி பாலகிருஷ்ணன் நடித்த அகண்டா திரைப்படம் கடந்த மாதம் திரைக்கு வந்து வசூலில் கொடி கட்டிப் பறக்கிறது. இத்திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் ஓடிடியில் வெளியானது.
அகண்டா திரைப்படத்தில் இரு வேடங்களில் பாலகிருஷ்ணா நடித்துள்ளார். 2-வது பாகத்தில் அகோரி சாமியாராக படுமூர்க்கமான கதாபாத்திரத்தில் வலம் வருகிறார் பாலகிருஷ்ணா.
அரை நிர்வாணத்தில்.. சங்குகள் ஒலிக்க.. சிஷ்யையை திருமணம் செய்த
யார் அகோரிகள்?
அகோரிகள் குறித்த புரிதல்கள் இன்னமும் நமது நாட்டில் விவாதிக்கப்பட்டுதான் வருகிறது. அகோரிகள் என்பவர்கள் குடும்ப உறவுகளை வெறுத்து ஆன்மீகப் பாதைக்கு சென்றவர்கள். காசி, இமயமலை என கடும் உறைபனி இடங்களில் தவமிருப்பவர்கள். இவர்களே அகோரிகள் என அழைக்கப்படுகின்றனர். இந்து சாமியார்கள் அல்லது அகோரிகள் பல்லாயிரக்கணக்கில் நாடு முழுவதும் பரவிக் கிடக்கின்றனர். இவர்களின் வாழ்விடம் என்பது வெளிப்படையானது அல்ல.
அகாடாக்களும் ஹரித்வாரும்
ஆனால் அகோரிகளை ஒருங்கிணைக்கக் கூடிய அகாடாக்கள் அல்லது அகாராக்கள் ஏராளமாக உள்ளன. 10க்கும் மேற்பட்ட பொது அகாடாக்கள் உள்ளன. இந்த அகாடாக்கள் கீழ்தான் அத்தனை அகோரி சாமியார்களும் வருவர். அகாடாக்கள் அனைத்துக்குமே ஹரித்வார் புனித நகரில் சொந்தமான தலைமை நிலையங்கள் உள்ளன. பெரும்பாலான அகாடாக்கள் ஏசி வசதிகளுடன் கூடிய சொகுசு கட்டமைப்பு கொண்டவை. குஜராத்தின் கிர்நார், காசி உள்ளிட்ட பல இடங்களிலும் அகாடாக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போதை பொருட்கள், கொலைகள்
இந்த அகாடாக்களில் அல்லது அகோரி சாமியார்கள் ஒன்று கூடும் கும்பமேளாக்களில் போதை வஸ்துகள் இயல்பாக புழங்கக் கூடும். இந்த அகாடாக்களைச் சேர்ந்த சாமியார்கள்தான் கும்பமேளா காலங்களில் நிர்வாண ஊர்வலங்கள் நடத்துவர். பல ஆண்டுகளாக கும்பமேளா காலத்து நிர்வாண ஊர்வலங்களில் எந்த அகாடாவை சேர்ந்தவர் முதல் முன்னுரிமை பெறுவது என்பதில் பெரும் மோதலே நடக்கும். ஹரித்துவாரில் 100க்கும் மேற்பட்ட அகோரிகள் தங்களுக்கு இடையே அடித்துக் கொண்டு மாண்ட வரலாறும் உண்டு. ஆனால் போதை வஸ்துகளுக்காகவோ, கொலைகளுக்காகவோ அகாடாக்கள் மீது அகோரிகள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தது இல்லை.
அகோரிகள் கொலை செய்யலாம்?
இருப்பினும் அகோரிகள், அகாடாக்கள் எந்த சட்டங்களின் கீழ் வருவர் என்பது புரியாத புதிர். ஏனெனில் அகோரி சாமியார்கள் தாங்களே சிவன் என்கிற சித்தாந்த்தைக் கொண்டவர்கள். நாங்கள் இந்த அரசியல் சட்டங்களுக்குட்பட்டவர்கள் அல்ல என்பது அகோரிகளின் நிலைப்பாடு. இதனையே நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அகண்டா திரைப்படத்தின் இறுதியில் பலமுறை வலியுறுத்தப்பட்டுள்ளது. பல நூறு பேரை அடித்து கொலை செய்யும் பாலகிருஷ்ணா, சிவனாக அவதரித்தே தாம் நியாயத்தை நிலைநிறுத்த கொலை செய்தேன்; அது உங்கள் சட்டத்தின் கீழ் வராது என பலமுறை அழுத்தம் திருத்தமாக சொல்வார். அதாவது அகோரிகளின் நடவடிக்கைகள் இந்த தேசத்தின் அரசியல் சட்டத்துக்கும் அப்பாற்பட்டது என்கிற ஒரு கருத்தை ஆணித்தரமாக முன்வைக்கிறது அகண்டா சினிமா. இதுதான் இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.