Mr.விஜய் டிவி அட்மின்! என் பிறந்தநாளுக்கு ஏன் வாழ்த்தவில்லை! நான் கீழ்ஜாதியா? நாஞ்சில் விஜயன் கேள்வி
சென்னை: விஜய் டிவி அட்மின் எனக்கு ஏன் பிறந்தநாள் வாழ்த்துகளை கூறவில்லை, மற்றவர்களுக்கு கூறிவிட்டு என்னை மட்டும் ஒதுக்கியது ஏன் என நாஞ்சில் விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நாஞ்சில் விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஹலோ மிஸ்டர் விஜய் டிவி சமூகவலைதள அட்மின் நான் கடந்த 15 ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து வருகிறேன். யாருமே போட தயங்கக் கூடிய பெண் வேடத்தையும் நான் துணிச்சலாக போட்டு மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கிறேன்.
நம் விஜய் தொலைக்காட்சிகளில் பணிபுரியக் கூடிய சில கலைஞர்களுக்கு கடந்த வாரம் பிறந்தநாள் வாழ்த்தினை நமது விஜய் தொலைக்காட்சி சமூகவலைதளத்தின் மூலமாக தெரிவித்தீர்கள். அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.
அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளும் கூட. ஆனால் எனது பிறந்தநாளும் கடந்த வாரம்தான் நடந்தது. ஆனால் எனக்கு ஒரு வாழ்த்து நீங்கள் கூறவில்லை. அது ஏன் மறந்துவிட்டீர்களா இல்லை வேண்டாம் என ஒதுக்கி விட்டீர்களா?
அந்த காலத்தில் ஒருவர் செய்யும் தொழிலை வைத்து உயர்ஜாதி, கீழ் ஜாதி என பிரித்தார்கள். இப்போது நீங்கள் செய்வதும் கிட்டத்தட்ட அது போல தான் இருக்கிறது. தொலைக்காட்சிகளில் உச்ச புகழ் பெற்ற கலைஞர்களை உயர்ஜாதியாகவும் என்னை போல் ஒரு அங்கீகாரம் கிடைக்காதா என போராடிக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் கீழ் ஜாதியாகவும் நீங்கள் பார்க்கிறீர்களோ என வருத்தம் எனக்கு இருக்கிறது.
மேலும் இந்த நிகழ்வு தொலைக்காட்சியில் பணிப்புரியக் கூடிய அதிகாரிகளுக்கு தெரியாமல் கூட இருக்கலாம். ஏனென்றால் இப்படிப்பட்ட முடிவுகளை விஜய் டிவி சமூகவலைதளத்தை பார்க்கக் கூடிய அட்மின்தான் முடிவு செய்வார்கள். மற்ற அதிகாரிகளுக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு. இதெல்லாம் ஒரு விஷயமா, கடந்து போ நாஞ்சில் விஜயன் என சொல்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். இப்படித்தான் பல இடங்களில் நம் உரிமைகளை நாம் பெற மறுக்கிறோம். நம் உரிமையை நாம்தான் கேட்டு வாங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் விக்ராந்த், ஸ்ரீகவுரி பிரியா, புகழ், கமல்ஹாசன், வெங்கட் பிரபு உள்ளிட்டோருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை விஜய் டிவி கூறிய நிலையில் தனக்கு மட்டும் ஏன் கூறவில்லை என நாஞ்சில் விஜயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாஞ்சில் விஜயனுக்கு நவம்பர் 11 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.நாஞ்சில் விஜயனின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் லைக் போட்டுள்ளார்.
சிலர் சரியான கேள்வி என்று பாராட்டியுள்ளனர். அவர்களில் ஒரு சிலர் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் சொல்லவில்லை என்பதற்காக சில்லரைத்தனமாக அழுறது சரியா என கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications