"எனக்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்குறீங்களே.. புதுச்சேரியில் என்ன பண்ணுறீங்க.". மோடி நேரடி 'அட்டாக்'
சென்னை: உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் புதுச்சேரியில் 10 வருடங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் எடுப்பவர்கள்தான் அங்கு ஆட்சியில் இருக்கிறார்கள் என்று காங்கிரஸ் கட்சியை சாடியுள்ளார்.
பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இன்று துவங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தின் கீழ் நோய்வாய்ப்பட்ட மக்கள் அதிகபட்சம் 5 லட்சம் மதிப்புக்கு இலவசமாக, சிகிச்சை பெற முடியும்.
வீடியோ கான்பரன்ஸ் மூலமான துவக்க விழாவின்போது ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் பயன் பெற்ற ஒரு புற்று நோயாளி அவருக்கு இந்த திட்டம் எந்த அளவுக்கு உதவியாக இருந்தது என்பது பற்றி எடுத்துக் கூறினார்.

நெகிழ்ச்சி
ஜம்மு பகுதியை சேர்ந்த ரமேஷ் லால் என்ற அந்த நடுத்தர வயது ஆண், புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு பணவசதி இல்லாமல் தவித்த போது பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் அட்டை பெற்று இலவசமாக வைத்தியம் பார்த்து நோயிலிருந்து நீண்டதாக நெகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

வளர்ச்சிக்கான ஓட்டு
நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீரில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் தேர்தலில் மக்கள் வளர்ச்சிக்காக ஓட்டு போட்டுள்ளனர். மகாத்மா காந்தியின் கிராம சுவராஜ் கனவை ஜம்மு-காஷ்மீர் வென்றெடுத்துள்ளது.

புதுச்சேரி தேர்தல்
ஜம்மு காஷ்மீர் அரசில் முன்பு நாங்களும் அங்கம் வகித்து இருக்கிறோம். பின்னர் அந்த கூட்டணியை உடைத்து வெளியேறினோம். பஞ்சாயத்து தேர்தலை உரிய நேரத்தில் நடத்த வேண்டும் என்பதுதான் அப்போது எங்களின் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. மக்களுக்கு தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க கூடிய அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்திதான் கூட்டணியில் இருந்து வெளியேறினோம். ஆனால் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியும் கூட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் இன்னமும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. எனக்கு யார் ஜனநாயகம் பற்றி பாடம் நடத்துகிறார்களா அவர்கள்தான் அங்கு ஆட்சியிலே இருக்கிறார்கள்.

எல்லை வசதிகள்
முந்தைய ஆட்சியாளர்கள் எல்லைப்புற மாநிலங்களில் உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தவறி விட்டனர். ஆனால் பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்து அந்த விஷயத்தில் கவனம் செலுத்தி வருகிறது. எல்லையில் அண்டை நாடுகள் தாக்குதல் தொடர்ந்து பிரச்சினையாக இருக்கிறது. பூஞ்ச், சம்பா மற்றும் கத்துவா உள்ளிட்ட பகுதிகளில் பதுங்கு குழிகள் அமைக்கும் பணி வேகமாக நடைபெறும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications