இது வேறயா? அமித் ஷா மகன் ரூட்டை பிடித்த ‘வாரிசு’! கிரிக்கெட்டில் கால் பதித்த நத்தம் விஸ்வநாதன் மகன்!
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சரும் ஜெயலலிதா காலத்தில் அதிகாரமிக்க நபராக வலம் வந்த நத்தம் விஸ்வநாதனின் மகன் தற்போது கைப்பற்றியுள்ள புதிய பதவி தான் திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே பேசு பொருளாக மாறி இருக்கிறது. அடுத்த அமித் ஷா மகன் ஜெய் ஷா அளவுக்கு பில்டப் செய்து பேசி வருகின்றனர் உள்ளூர் அதிமுகவினர். அப்படி என்ன பதவி? என்ன பின்னணி? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு பிறகு அதிகார மையமாக வலம் வந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட நத்தம் விஸ்வநாதன் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தஞ்சம் புகுந்துள்ளார்.
கடந்த தர்மயுத்தத்தின் போது ஓ.பன்னீர்செல்வத்தின் வலதுகரமாக இருந்த இவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் துணை பொதுச்செயலாளராக உயர்ந்திருக்கிறார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஐவர் அணியில் ஒருவராக இருந்த அவர் அவரது மறைவுக்கு பிறகு சசிகலா தரப்பால் ஓரம் கட்டப்பட்டார்.
நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்த வைத்திலிங்கம்?.. பயத்தில் பேசும் தங்கமணி.. விளாசிய ஜேசிடி பிரபாகர்
நத்தம் விஸ்வநாதன்
தனது குருநாதரான திண்டுக்கல் சீனிவாசனை ஓரம் கட்டி விட்டு திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே ஆதரவாளர்கள் வட்டத்தை பெருக்கிக் கொண்ட அவர் 2016 சட்டமன்றத் தேர்தலில் தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்டார். பின்னர் ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து அடுத்த தேர்தலில் நத்தம் தொகுதியிலேயே போட்டியிட்ட அவர் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக திரும்பி திண்டுக்கல் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராகவும் அதன்பின்னர் தீவிர எடப்பாடி ஆதரவாளராக மாறி கடந்த பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு தற்போது துணை பொது செயலாளர் ஆக உயர்ந்துள்ளார்.
கிரிக்கெட் மைதானம்
ஆரம்பத்தில் புளி வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படும் நத்தம் விஸ்வநாதன் தற்போது தமிழக அளவில் பலம் பொருந்திய அரசியல்வாதிகளில் ஒருவராக இருக்கிறார். அவருக்கு திண்டுக்கல் நத்தம் சாலையில் என்பிஆர் கல்லூரி உள்ளது. கலை, அறிவியல், ஆசிரியர் பயிற்சி, பாலிடெக்னிக், பொறியியல், கேட்டரிங் என மினி பல்கலைக்கழகம் போல் செயல்பட்டு வரும் அந்த கல்லூரியில் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு அடுத்தபடியாக பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம் உள்ளது. கடந்த முறை கூட ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்ட நிலையில் இந்தியா முழுவதும் இந்த மைதானம் குறித்து பேசப்பட்டது.
மகன் அமர்நாத்
அப்போது ரைடில் சிக்கினார் நத்தம் விஸ்வநாதன். அந்த கல்லூரியை அவரது மகனான அமர்நாத் நிர்வகித்து வருகிறார். மேலும் விஸ்வநாதனின் தொழில்களையும் அவரே கவனித்து வருகிறார். அரசியலைப் பொறுத்தவரை நத்தம் விஸ்வநாதனின் மகனான அமர்நாத் எப்போதுமே சைலண்ட் டைப் தான். மருமகனான ஆர்விஎன் கண்ணன் தான் முழுக்க முழுக்க அரசியல் வாரிசாக பார்க்கப்படுகிறார். தற்போது நத்தம் யூனியன் சேர்மேன் ஆகவும் அவரது மருமகன் கண்ணன் இருக்கிறார். அரசியலில் அவ்வளவாக ஆர்வம் காட்டாத அமர்நாத் தனது தந்தையின் தொழில்களை நிர்வகிப்பதிலும் கல்லூரி நிர்வாகத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.
கிரிக்கெட்டில் கவனம்
இந்த நிலையில் தான் விளையாட்டின் பக்கம் குறிப்பாக கிரிக்கெட் பக்கம் அமர்நாத்தின் கவனம் திரும்பி இருக்கிறது. ஏற்கனவே மிகப் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தின் உரிமையாளராக இருக்கும் அவர் தற்போது திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இதை அடுத்து அதிமுகவினர் அனைவரும் பெரிய அளவில் பதவியை பெற்று விட்டது போல சமூக வலைதளங்களை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் மாநில அளவிலான பதவிகளைப் பெற அமர்நாத் தீவிரம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. நடக்கவுள்ள தேர்தலில் மாநில அளவிலான பதவிக்கு போட்டியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா எப்படி இந்திய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக இருக்கிறாரோ அதேபோல தமிழக அளவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்பதுதான் அமர்நாத்தின் என்னமாம். தற்போது இந்த விவகாரம் தான் திண்டுக்கல் கிரிக்கெட் சங்க வட்டாரத்திலும் அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இனிமேல் தானே மாநில பதவி இப்போது மாவட்டம் மட்டும் தானே எனவும் சிலர் பேசி வருகின்றனர்.