மாண்டஸ்: காற்றின் வேகத்தால் தலைமைச் செயலகத்தில் சேதமடைந்த தேசியக் கொடி.. மெட்ரோ ரயில்கள் இயங்குமா?
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மாண்டஸ் புயலால் பலத்த காற்று வீசியதன் காரணமாக தேசியக்கொடி பாதிக்கப்பட்டது. இதையடுத்து வேறு ஒரு கொடி புதிதாக மாற்றப்பட்டது.
மாண்டஸ் புயல் சென்னையிலிருந்து 180 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருக்கிறது. இது வேகமாக கரை அருகே நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்றைய தினம் இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்வு நாளை அதிகாலை 3 மணி வரை நிகழ வாய்ப்புள்ளது. இது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்பதால் சென்னை, அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையை நெருங்கிய மாண்டஸ் புயல்.. எங்கெல்லாம் அதி கனமழை?- வானிலை மையம்
காற்றின் வேகம்
இந்த நிலையில் இன்று மதியம் முதலே காற்றின் வேகம் அதிகமாக இருக்கிறது. இதனால் கடற்கரை பகுதிகள், திறந்தவெளி மைதானங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடலோர கிராமத்தினரின் வீடுகள் கடல் அரிப்பு காரணமாக தரைமட்டமாகியுள்ளன. இன்னும் கொஞ்ச நஞ்ச வீடுகளும் இடியும் அபாயம் உள்ளது.
மீன் வலைகள்
தங்கள் வாழ்வாதாரமான மீன் வலைகள், படகுகள் ஆகியவற்றை மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு டிராக்டர் மூலம் இழுத்துச் செல் கிறார்கள். இன்று மாலை முதல் மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். பேரிடர் மீட்பு படையினர், நீச்சல் வீரர்கள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளார்கள்.
தேசியக் கொடி
இந்த நிலையில் காற்றின் வேகத்தால் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தேசியக் கொடி சேதமடைந்தது. இதையடுத்து சேதமடைந்த கொடியை அதிகாரிகள் உடனே மாற்றிவிட்டனர். புயல் காரணமாக 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து இன்று இரவு முதல் பேருந்துகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும்
மெட்ரோ ரயில் சேவை வழக்கம் போல் இயங்கும். வழக்கம் போல் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடல் கொந்தளிப்பு காரணமாக பழவேற்காடு- காட்டுப்பள்ளி சாலை நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
மின் இணைப்பு துண்டிப்பு
மாண்டஸ் புயல் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.