சைதை சாதிக் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க..? தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்! பரபர!
சென்னை : பாஜகவை சேர்ந்த நடிகைகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக், சமீபத்தில் திமுக கூட்டம் ஒன்றில் பேசும்போது பாஜகவைச் சேர்ந்த நடிகைகள் பற்றி பேசியது சர்ச்சைக்குள்ளானது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த குஷ்பு, தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் செய்தார். இதற்கிடையே சைதை சாதிக் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். பாஜக, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது.
பரந்தூர் விமான நிலையம்! தமிழக அரசு மூடி மறைக்கக் கூடாது! எஸ்.டி.பி.ஐ. எழுப்பும் சந்தேகம்!
சைதை சாதிக் சர்ச்சை பேச்சு
சென்னை ஆர்.கே.நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய, திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பிய குஷ்புவுக்கு பதிலளித்த திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, "ஒரு பெண்ணாகவும் சக மனிதராகவும் இதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். இதை யார் செய்திருந்தாலும், சொன்ன இடம் அல்லது அவர்கள் சார்ந்த கட்சி எதுவாக இருந்தாலும் இதனை சகித்துக்கொள்ள முடியாதது. இதற்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.
வழக்குப்பதிவு
சைதை சாதிக் பேச்சு விவகாரம் பெரும் விவாதமானதைத் தொடர்ந்து, தன் பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் தான் பேசியது வருத்தம் அளித்திருந்தால் குஷ்புவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார் சைதை சாதிக். எனினும், சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக மகளிர் அணி சார்பில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த பெண்களைப் பற்றி இழிவாக பேசிய சைதை சாதிக் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மகளிரணி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
குஷ்பு டெல்லியில் புகார்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும், பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று மகளிர் ஆணைய ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார். குஷ்பு தனது புகாரில், சைதை சாதிக் பேசும்போது கைதட்டி ரசித்த அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
டிஜிபிக்கு நோட்டீஸ்
இந்நிலையில், திமுக பேச்சாளர் சைதை சாதிக் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு வார காலத்திற்குள் அறிக்கை அளிக்குமாறு தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு, தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த கடிதத்தில், "சைதை சாதிக்கின் பேச்சு இந்திய தண்டனை சட்டம் 509-ன் படி குற்றமாகும். இதுபோன்ற பேச்சுக்கு, சமீபத்தில் மும்பை சிறப்பு நீதிமன்றம் ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
7 நாட்களுக்குள்
சொல், செயல், சைகை என எந்த வகையிலும் பெண்களின் நடத்தையை இழிவுபடுத்தும் வகையில் செயல்படுவது மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடிய குற்றமாகும். எனவே சைதை சாதிக் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும். அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஏழு நாட்களுக்குள் தேசிய மகளிர் ஆணையத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.