நீட் தேர்வு...தமிழக மாணவர்களின் சதவீதம் சரிவு...முந்திச் செல்லும் வடமாநிலங்கள்!!
சென்னை: தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் சதவீதம் நடப்பாண்டில் 13% குறைந்துள்ளது. நடப்பாண்டில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டு 1,34,714 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்தனர்.
தமிழகத்தில் நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் சதவீதம் குறைந்து இருக்கும் நிலையில் கல்வியில் பின் தங்கி இருக்கும் மாநிலங்களில் கூட நீட் தேர்வு எழுத அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்து இருப்பது கவலை அளிப்பதாக இருக்கிறது. ஆந்திராவில் நடப்பாண்டில் 61,892 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டில் 57,755 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்தனர்.

28 சதவீதம் அதிகரிப்பு
பீகார் மாநிலத்தில் கடந்தாண்டு 56,907 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்தனர். நடப்பாண்டில் 78,960 பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டைவிட அந்த மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் சதவீதம் 28ஆக அதிகரித்துள்ளது.

குஜராத்
தமிழ்நாட்டைப் போலவே டெல்லியிலும் நடப்பாண்டில் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. டெல்லியில் கடந்தாண்டு 59,137 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இது நடப்பாண்டில் 53,993 ஆக குறைந்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்தாண்டு 79,872 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்தனர். நடப்பாண்டில் 80,219 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம்
தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் சதவீதம் குறைந்துள்ளது. அந்த மாநிலத்தில் கடந்தாண்டு 1,17,714 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். நடப்பாண்டில் 1,15,959 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். பாண்டிச்சேரியில் கடந்தாண்டு 7,245 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருந்தனர். நடப்பாண்டில் வெறும் 7,137 மாணவர்கள்தான் விண்ணப்பித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்தாண்டு 1,39,497 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். இதுவே நடப்பாண்டில் 1,66,582 மாணவர்கள், அதாவது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 16 சதவீதம் பேர் கூடுதலாக நடப்பாண்டில் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு மையங்கள்
நாடு முழுவதும் நடப்பாண்டில் 15, 97,433 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். இதுவே கடந்தாண்டு 15,19,375 லட்சம் மாணவர்கள் எழுதி இருந்தனர். கடந்தாண்டு 2546 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. நடப்பாண்டில் கொரோனா தொற்று காரணமாக கூடுதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 3842 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற மாணவர்கள்
ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதுபவர்களின் சதவீதம் குறைந்து வருகிறது. இந்த தேர்வை எழுதுவதற்கு மாநில தேர்வு முறையில் படிக்கும் மாணவர்கள் அஞ்சுகின்றனர். குறிப்பாக தமிழகத்தின் கிராமப்புற மாணவர்கள் இந்த தேர்வை எழுத பயப்படுகின்றனர். அவர்களது கல்வி முறை தேசிய அளவில் போட்டியிடுவதற்கு தகுதியானதாக இல்லை என்று கருதுகின்றனர்.

தமிழ்நாடு வாய்ப்பு பறிப்பு
மேலும், நீட் தேர்வை சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏற்றவாறு தயாரிக்கப்படுவதால், மாநில கல்வியில் படிக்கும் மாணவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால்தான் நீட் தேர்வை மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவ இடஒதுக்கீடுகளை மற்ற மாநிலங்களில் இருக்கும் மாணவர்கள் பெறும் வாய்ப்பு ஏற்படுகிறது. தமிழ்நாட்டின் வாய்ப்பு தேர்வு என்ற முறையில் பறிக்கப்படுகிறது.

அரசியல்வாதிகள்
மாணவர்களின் எண்ணிக்கை என்று பார்க்கும்போது, பீகாரை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தாலும், மாணவர்கள் தங்களது அச்சத்தின் காரணமாக நீட் தேர்வை தவிர்ப்பது எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாட்டின் அரசியல்வாதிகள், கல்வி நிலையங்கள் இணைந்து இதற்கு நல்ல முடிவை எட்ட வேண்டும் என்பதுதான் பலரின் விருப்பமும்.

எதிர்ப்பு
கொரோனா கால கட்டத்தில் இதுபோன்று நீட் தேர்வுகளை நடத்துவது நகரங்களில் இருக்கும் பணக்கார பெற்றோர்களின் பிள்ளைகளுக்குத்தான் சாதகமாக அமையும். கடந்த ஐந்து மாதங்களாக ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதி இல்லை. நூலகங்களுக்கு செல்ல முடியவில்லை என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா கால கட்டத்தில் நீட் தேர்வு நடத்துவதற்கு இவர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications