அயோக்கியத்தனம்.. ஆ.ராசாவின் பழைய வீடியோவை போட்டுக்காட்டிய எடப்பாடி.. சரமாரி குற்றச்சாட்டு!
சென்னை: திமுக எம்பி ஆ. ராசா நீட் குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்றை போட்டுக்காட்டி எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி அளித்தார்..
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல இன்று தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது..
இந்த நிலையில் இன்று அவையில் மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. குட்கா விவகாரம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கோரிக்கை வைத்த அதிமுக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தது.

வெளிநடப்பு
அவைக்கு வெளியே பேசிய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அவையிலே எங்களை பேச அனுமதிக்காத காரணத்தால் நாங்கள் அவையில் இருந்து வெளியேறினோம். ஏற்கனவே நீட் தேர்வு குறித்து பல விவாதங்கள் நடைபெற்று உள்ளன. முதல்வராக ஜெயலலிதா இருந்த போது தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வந்தது. இப்போது மீண்டும் தீர்மானம் கொண்டு வர திமுக முடிவு செய்துள்ளது. மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்றிய அரசு திமுக அரசு. மாணவர்களை நம்ப வைத்து திமுக ஏமாற்றி உள்ளது.

வீடியோ
நாங்கள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த போது.. திமுக முன்னாள் அமைச்சர் ராஜா ஒரு கருத்தை தெரிவித்தார் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவிட்டு.. பின்னால் இருந்த அதிமுக உறுப்பினரிடம் .. அந்த போனை கொடுங்க என்று கேட்டு போன் ஒன்றை வாங்குகிறார். அந்த போனில் திமுக எம்பி ராசா பேசும் வீடியோ ஒன்று ஓடிக்கொண்டு இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக அதிமுக கொண்டு வந்த தீர்மானத்தை விமர்சித்து ஆ. ராசா பேசிய வீடியோ ஆகும் இது.
Recommended Video

கண்டனம்
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சாத்தியமே இல்லை என்று கூறும் அதிமுக தீர்மானம் கொண்டு வந்தது ஏன் , நீட் தேர்வை ஆதரித்துவிட்டு இப்போது ஏன் அதிமுக தீர்மானம் கொண்டு வந்தது என்று ஆ. ராசா கேள்வி எழுப்பிய பழைய வீடியோவை போட்டுக்காட்டி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பேசினார். எடப்பாடி தொடர்ந்து பேசியதாவது, நாங்கள் தீர்மானம் கொண்டு வந்த போது அதை அயோக்கியத்தனம் என்று எம்பி ஆ. ராசா கூறினார். இப்போது வந்து எங்களுக்கு எதிராக பேசுகிறார்கள்.

ஆ. ராசா
நீட் தேர்வு என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பு. அதை எதிர்த்து யாரும் செயல்பட முடியாது. மாநில அரசுகள் இதை எதிர்க்க முடியாது. ஆனாலும் நாங்கள் சட்ட போராட்டம் தொடர்ந்து நடத்தினோம். 2010 டிசம்பர் மாதம் காங்கிரஸ் தலைமையிலான அரசுதான் நீட் கொண்டு வந்தது. திமுகதான் அப்போது திமுக கூட்டணியில் இருந்தது என்பதை மறக்க வேண்டும். திமுகதான் மக்களை ஏமாற்றியது, என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications