நாளை நீட் தேர்வு.. தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் எழுதுகிறார்கள்.. மாணவர்களே கவனம்
சென்னை: கொரோனா ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்ட நீட் தேர்வு செப்டம்பர் 12ம் தேதியான நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தம் 18 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் மட்டும் 1,10,971 பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர். வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடத்தப்பட உள்ளது.
இது ஒருபுறம் எனில் நாளை மறுநாள் அதாவது திங்கள் அன்நு நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
இந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே நீட் தேர்வு அடுத்த ஆண்டில் இல்லாமல் போகும். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்பதே எதார்த்தமான உண்மை.

கண்டிப்பாக தொடரும்
அதேநேரம் நீட் தேர்வுக்கு வலிமையான எதர்ப்பை தமிழக சட்டசபை பதிவு செய்வதாக மட்டுமே இந்த தீர்மானம் அமையும். ஏனெனில் மத்திய அரசு நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளித்தால் மட்டுமே இங்கு நீட் தேர்வு நடைபெறாமல் போகும். அதுவரை நீட் தேர்வு தொடரவே செய்யும் என்பது பதிவு செய்யப்பட வேண்டிய உண்மை ஆகும்.

நீட் தேர்வு
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாளை (செப்.12) நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு முதல் முறையாக தமிழ் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது. மலையாளம், பஞ்சாபி ஆகிய மொழிகள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வை எழுத, 1,10,971 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், 40,376 மாணவர்களும் 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளார்கள். தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் இருந்து 17,992 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில் இருந்து 15,067 பேர் விண்ணப்பித்துள்ளனர். கோவை, மதுரை உள்பட பல்வேறு நகரங்களில் கணிசமானோர் விண்ணப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் 18 நகரங்களில் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா காரணமாகத் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது.

முன்கூட்டியே செல்லுங்கள்
வழக்கமான தேர்வு விதிமுறைகளோடு, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைளுடன் இணைந்து தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வுக்கான மையங்களுக்கு கடைசி நேரத்தில் மாணவர்கள் செல்லாமல் முன்கூட்டியே சென்றுவிடுவது நல்லது. அதேபோல் நீட் தேர்வுக்கே உரிய வழக்கமான மற்றும் கடுமையான பரிசோதனைகள் இருக்கும் என்பதால், மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகள் படி தேர்வு மையத்திற்கு வருவது கட்டாயம். பதற்றம் இல்லாமல் எழுதுங்கள். நீட் தேர்வில் வெற்றி பெற மாணவ செல்வங்களுக்கு வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications