வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்.. நவம்பர் முதல் வாரத்தில் வெளுக்கும் மழை.. வெதர்மேன் கணிப்பு
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்க வாய்ப்பிருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் 31 ஆம் தேதி தொடங்கும். அந்த தேதியிலிருந்து ஓரிரு நாட்கள் முன் கூட்டியோ இல்லை தாமதமாகவோ தொடங்க வாய்ப்பிருக்கிறது.
அது போல் நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் மழை தீவிரமடையும். வறண்ட அக்டோபர் மாதத்தில் கிழக்கு நோக்கி வீசும் காற்று இல்லாமலேயே தமிழகத்திற்கு தேவைக்கு அதிகமாகவே மழை கிடைத்துள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது வாரம்
தமிழகத்தில் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்குவதாக இருந்த வடகிழக்கு பருவமழை காலதாமதமாகி இரு வாரங்கள் கழித்து 4ஆவது வாரத்தில் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழையின் முதல் புயலானது மேற்கு வங்கம்- வங்கதேசம் பக்கம் செல்கிறது.

புயல் சின்னம்
இந்த ஆண்டு நிறைய புயல் சின்னம் உருவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே அவ்வப்போது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தற்போது மழையின் தீவிரம் அதிகரித்தால் வெள்ள பாதிப்பு ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அணைகள் நிரம்பியது
மேட்டூர் அணை, பவானி அணை உள்ளிட்டவை நிரம்பி அந்த கரையோர மக்களை அப்பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தமிழகத்தின் தென் பகுதிகளுக்கும் பலனை அளிக்கக் கூடிய தென்மேற்கு பருவமழை காலம் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை இருக்கும்.

கடந்த ஆண்டு நிலவரம்
தென்மேற்கு பகுதியில் வீசும் காற்று தென் மேற்கு பருவமழை என்றும் வங்காள விரிகுடாவில் வீசும் காற்று வடகிழக்கு பருவமழை என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழைதான் பலனை கொடுக்கும். இந்த பருவமழைகள்தான் ஒவ்வொரு ஆண்டும் வறட்சியையும் வெள்ளப்பாதிப்பையும் தீர்மானிக்கின்றன. கடந்த ஆண்டு தீவிர மழை பெய்தது. எப்போது மார்கழி மாத பனிக்கு முன்பே வடகிழக்கு பருவமழை முடியும். ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அதாவது தை மாதம் வரை மழையும் குளிரும் இருந்தது.












Click it and Unblock the Notifications