2 லட்சம் கேஸ்..11 வருஷ சர்வீஸ்? வாயை கொடுத்து மாட்டிக்கிட்டீங்களே! அண்ணாமலையை கலாய்த்த நெட்டிசன்கள்!
சென்னை : போலீசாக இருந்த 11 ஆண்டுகளில் 2 லட்சம் வழக்குகள் பதிவு செய்திருக்கிறேன் என்று கோவையில் நேற்று நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசிய நிலையில், அவர் போலீசாக இருந்தது 9 ஆண்டுகள் மட்டும்தான் எனவும், ஒரு நாளைக்கு 60 வழக்குகள் பதிவு செய்தார் என நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
கோவையில் ஆ.ராசாவைக் கண்டித்தும், பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமியை கைது செய்த திமுக அரசை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று சிவானந்த காலனி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்,பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன்,இந்து முன்னணி தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம்,மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்றனர்.

அண்ணாமலை
ஆர்ப்பாட்டத்தில் மேடையில் பேசிய அண்ணாமலை," மத்திய அரசு பிஎஃப்ஐ சார்ந்தவர்கள் 105 பேரை கைது செய்தனர். கேரளா வல்லபுரத்தில் என் ஐ ஏ அதிகாரிகள்,தவறு செய்த குற்றவாளிகளை, கைது செய்து ,உடனடியாக டெல்லி கோர்ட்டில் நிறுத்தி சிறைக்கு அனுப்பிவிட்டார்கள். எனக்கு சிஆர்பிசி சட்டம் தெரியும் . முதலமைச்சர் சிஆர்பிசி படித்துள்ளாரா என தெரியவில்லை. ஆனால் நான் 11 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன் என மிக ஆவேசமாகப் பேசினார்.

2 லட்சம் வழக்குகள்
முதல்வர் ஸ்டாலினுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பற்றி தெரியுமா எனத் தெரியவில்லை. ஆனால் என் வாழ்வில் 11 ஆண்டுகளில் 5000 நாட்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஐபிசி வழக்குகளைப் பதிவு செய்ததாகவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசினார். அண்ணாமலையின் பேச்சை அங்கிருந்த பாஜகவின் மிக உற்சாகமாக கைதட்டி ஆரவாரம் செய்தனர். இந்நிலையில் தான் அண்ணாமலையின் இந்த பேச்சை வைத்து பலரும் அண்ணாமலையை கலாய்த்து வருகின்றனர்.

11 ஆண்டுகள்
உண்மையில் அண்ணாமலை 11 ஆண்டுகள் பணியாற்றவில்லை. அவர் 2011ஆம் ஆண்டு பேட்ச் அதிகாரியாவார். ஆனால் அவர் போலீசாக இருந்தது 9 ஆண்டுகள் மட்டும்தான். அண்ணாமலை 2013ஆம் ஆண்டில் ஏடிஎஸ்பியாகப் பொறுப்பு வழங்கப்பட்ட நிலையில், 2019ஆம் ஆண்டு பெங்களூர் டிசிபியாக இருக்கும் போது தன் பதவியை அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.விடுமுறை நாட்களே இல்லாமல் கணக்கு செய்தால் கூட நாள் ஒன்றுக்கு 60 வழக்குகள் வருகிறது. ஒரே ஆள் எப்படி இத்தனை வழக்குகளை பதிவு செய்திருக்க முடியும் என இணையவாசிகள் கேலி செய்து வருகிறார்கள்.

கிண்டல்
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் பேசிய அண்ணாமலை," இது நாள் வரை நான் 20,000 புத்தகங்கள் வரை படித்து இருப்பேன். அதேபோல சுமார் 12 ஆயிரம் புத்தகங்களைப் பராமரித்து வருகிறேன். எனது அலுவலகம், எனது வீடு என எந்த இடத்திற்குச் சென்றாலும் கூட குறைந்தது இரு புத்தகங்களை வைத்திருப்பேன்" எனப் பேசினார். அப்போது ஒரு புத்தகம் படிக்க ஒரு நாள்னு கணக்கு போட்டாலும், 20,000 புத்தகங்கள் படிக்க 54 வருஷம், 9 மாசம் ஆகுமே அண்ணாமலை?" என பலரும் கேள்வி கேட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications