செல்லாது.. செல்லாது.. செல்லாது! அதிமுக புதிய நியமனங்கள் குறித்து ஓபிஎஸ் கருத்து - காரணம் “அது”தானாம்
சென்னை: அதிமுகவின் துணை பொதுச்செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர், அமைப்புச் செயலாளர்கள் பதவிகள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், கட்சி விதிகளின்படி புதிய நியமனங்கள் எதுவுமே செல்லாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.
புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என்ற உத்தரவுடன் கடந்த 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை வானகரத்தில் கூடியது.
கூட்டத்தில் பேசிய அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், ஜூலை 11-ஆம் தேதி நிச்சயமாக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக வருவார் எனவும் கூறினார். இதனால் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பொதுக்குழு முடிவுக்கு வந்தது.

அதிமுக பொதுக்குழு
இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று காலை 9 மணிக்கு நடைபெற்றது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுத்தது. இதனை தொடர்ந்து சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது.

இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ்
ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க மறுபக்கம், பொதுக்குழுவில் ஜெயலலிதா அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்ற தீர்மானம் ரத்து செய்யப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

துணை பொதுச்செயலாளர்கள்
இதனை தொடர்ந்து அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள துணை பொதுச்செயலாளர்களுக்கான பதவிகளை இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதன்படி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் துணை பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

அமைப்பு செயலாளர்கள்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிமுக தலைமை நிலைய செயலாளராகவும், பொன்னையன் அனைத்து உலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராகவும், அதிமுக அமைப்பு செயலாளர்களாக முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், காமராஜ், கடம்பூர் ராஜு, ஓ.எஸ்.மணியன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின், மாவட்ட செயலாளர்கள் ராஜன் செல்லப்பா, பாலகங்கா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
Recommended Video

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்திடன் சென்னையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், "அதிமுகவில் துணை பொதுச்செயலாளர்கள், தலைமைக் கழக செயலாளர், அமைப்புச் செயலாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதை எப்படி பார்ப்பது? சட்டரீதியாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், "தன்னிச்சையாக அவர்கள் அறிவித்த அறிவிப்புகள் அனைத்தும் அதிமுகவின் சட்ட விதிகளின் படி செல்லாது." என்றார்.












Click it and Unblock the Notifications