மக்களே.. நெக்ஸ்ட் ரவுண்டுக்கு ரெடியா.. நவம்பர் 16ம் தேதி உருவாகுகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி
சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து அதிகாலை நாகையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து உள்ள நிலையில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 16 ஆம் தேதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நவம்பர் தொடக்கத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கி இருக்கிறது. கடந்த புதன்கிழமை வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து கடந்த வியாழக்கிழமை அன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் அது நிலை கொண்டது.
ரவுண்டு கட்டிய மழை.. சீர்காழியில் இறங்கிய “பூதம்”! டமால்டுமீல் இடியால் தூக்கம் தொலைத்த சென்னை மக்கள்
தொடர் மழை
இதனால் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 20க்கும் அதிகமான மாவட்டங்களில் நல்ல மழை பெய்தது.
தாழ்வு மண்டலம்
காற்றழுத்து தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், அது நாகப்பட்டினம் - அதிராம்பட்டினம் இடையே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்டா மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்துக்கும் அதிகமாக விடாமல் மழை பெய்தது.
டெல்டா மாவட்டங்கள்
குறிப்பாக அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தீவிர கனமழை பொழிந்துள்ளது. 43 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்த பலத்த கனமழையால் விவசாய நிலங்கள், வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன. அதேபோல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
கரையை கடந்த தாழ்வு மண்டலம்
மேலும் சென்னையை சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் மழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
இதற்கிடையே வரும் நவம்பர் 16 ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடகடலோர பகுதிகளில் நிலைகொண்டு இருக்கும் நிலையில், உள் மாவட்டங்கள், கேரளா, வழியாக மேற்கு - வடமேற்கு திசையில் அரபிக்கடலுக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.