அடுக்குமாடி குடியிருப்புப் பதிவு: இனி அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ய தேவையில்லை: புதிய விதிமுறை
சென்னை: தமிழகத்தில் பத்திரப் பதிவு பணிகளை விரைவு படுத்த, 'ஸ்டார் 3.0' என்ற புதிய மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய உத்தரவை பதிவுத்துறை பிறப்பித்துள்ளது.. குறிப்பாக புதிய அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது, அதற்கான பத்திரப்பதிவு பணிகள் சம்பந்தமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன் ஆலிவர். அது என்ன?
பத்திரப்பதிவு துறையை மேலும் நவீனப்படுத்தி இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வரும் நோக்கில் தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறைக்கான ஸ்டார் 3.0 என்ற ஒரு சாப்ட்வேர் திட்டத்தை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறது.

பத்திரப்பதிவு ரூல்ஸ்
இதன்படி பொதுமக்கள் காகிதம் இல்லாமல் ஆன்லைனில் ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சொத்தினை எழுதிக்கொடுப்பவர், எழுதி வாங்குபவரின் அடையாள ஆவணங்களை கையில் கொண்டு செல்ல வேண்டாம்.
பொதுமக்கள் குறிப்பிட்ட சில பரிமாற்றங்களுக்கு, சார் - பதிவாளர் அலுவலகம் செல்லாமல், எங்கிருந்து வேண்டுமானாலும், பத்திரப்பதிவு செய்யலாம்.. தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை சட்டம் 2022-ன்படி சங்கங்களை பதிவு செய்ய, பொதுமக்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரில் வராமலேயே முற்றிலும் இணையதள வாயிலாக பதிவு செய்யும் புதிய வசதியும் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக பதிவுத்துறை
குறிப்பாக, புதிய அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்கும் போது, அதற்கான பத்திரப்பதிவு பணிகளை, கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்தபடியே மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், பத்திரத்தில் தொடர்புடைய, கட்டடத்தின் மதிப்பு சரியாக இருப்பதை, உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது..
இந்நிலையில், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சுற்றறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.. அதில், அடுக்குமாடி திட்ட வீடுகள் தொடர்பான, இரண்டாவது மற்றும் தொடர் விற்பனையின் போது, கள ஆய்வு செய்யாமல், பத்திரப்பதிவு செய்து கொடுக்க வேண்டும், மேலும், கள ஆய்வு தவிர்த்து, கால தாமதமின்றி பத்திரங்களை பதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று தமிழக பதிவுத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பதிவுத்துறையின் இந்த உத்தரவினால், சொத்துப் பரிமாற்ற நடைமுறையை மிகவும் எளிமையாகிறது.. பொதுவாக, பழைய வீடுகளை மறுவிற்பனை செய்யும் போது, சார் பதிவாளர் நேரில் வந்து கள ஆய்வு செய்த பிறகே ஆவணம் திரும்ப ஒப்படைக்கப்படும்.
அடுக்குமாடி வீடுகள் ஜாக்பாட்
ஆனால் இந்த ஆய்விற்காக வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்ததால், வங்கிக் கடன் பெறுபவர்கள் மற்றும் அவசரமாக வீடு வாங்குபவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினார்கள்.. இப்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதால், பத்திரப்பதிவு முடிந்த கையோடு ஆவணங்கள் கைக்குக் கிடைக்கும். இது கால விரயத்தைக் குறைப்பதோடு, கள ஆய்வின் பெயரில் நடக்கும் தேவையற்ற அலைக்கழிப்புகளையும், அதிகாரிகளின் தனிப்பட்ட தலையீடுகளையும் முற்றிலுமாகத் தவிர்க்க உதவும்.
எனினும், சில சிக்கல்களையும் இதில் நாம் கவனிக்க வேண்டியுள்ளது. இப்படி கள ஆய்வு தவிர்க்கப்படும் போது, அந்த திட்டத்தில் அனுமதித்ததை விட, கூடுதல் வீடுகள் கட்டப்பட்டு இருந்தால், அது தெரிய வராது... பத்திரத்தில் குறிப்பிட்ட லிப்ட், பார்க்கிங் வசதிகள் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்த முடியாது..
தமிழக அரசு அசத்தல்
வீட்டின் தற்போதைய சந்தை மதிப்பை விடக் குறைவாகக் காட்டி முத்திரை வரி ஏய்ப்பு செய்ய வாய்ப்புகள் உருவாகலாம். மேலும், ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அனுமதியின்றி செய்யப்பட்ட மாற்றங்களோ அல்லது விதிமீறல்களோ பதிவுத்துறைக்கு தெரியாமல் போகும் சூழல் உள்ளது. இதனால் பிற்காலத்தில் வில்லங்கங்கள் ஏற்படும்போது, அரசுத் தரப்பில் "நாங்கள் நேரில் பார்க்கவில்லை" என்ற வாதம் முன்வைக்கப்படலாம்.
இது நேர்மையான முறையில் வரி செலுத்தி வீடு வாங்குபவர்களுக்குப் பாதுகாப்பைத் தந்தாலும், ஒரு சிறிய அளவில் முறைகேடுகளுக்கான கதவையும் திறந்துவிடக்கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்..!!












Click it and Unblock the Notifications