சென்னை வடபழனியில் ‘ஸ்கை வாக்’.. செம மாஸ்! மெட்ரோ வழித்தடங்களை இணைக்க சூப்பரான ஆகாய நடைபாதை!
சென்னை: சென்னை வடபழனியில் புதிதாக அமையவுள்ள மெட்ரோ வழித்தடத்தையும், பழைய மெட்ரோ நிலையத்தையும் இணைக்கும் வகையில், ரூ.12 கோடி செலவில் புதிய ஆகாய நடைபாதை (Sky Walk) அமைய உள்ளது.
இந்த ஆகாய நடைபாதை 130 மீட்டர் நீளத்தில் 6 மீட்டர் அகலத்தில் கண்ணாடி மற்றும் இரும்பினால் அமைகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த ஸ்கை வாக் பணிகளை முடிக்க சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்
சென்னையில் முதல் கட்டமாக, 54 கி.மீ தொலைவிற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையில் பணிகள் நடந்து வருகின்றன.
இரண்டாம் கட்ட மெட்ரோ
இந்த வழித்தடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப் பாதை, மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றன. இதில் 119 கி.மீ தொலைவுக்கு வழித்தடம் அமைகிறது. இந்த பணிகளை 2028 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடித்து, மெட்ரோ ரயில்களை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தின் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான 4வது வழித்தடத்தில் முற்கட்டமாக பூந்தமல்லி - போரூர் வரையிலும், அதனை தொடர்ந்து போரூர் - வடபழனி - கோடம்பாக்கம் வரையிலும் மெட்ரோ ரயில் பாதையை அடுத்தாண்டு இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வடபழனி மெட்ரோ
இரண்டு பிரிவுகளையும் இணைக்கும் மையப் பகுதியாக வடபழனி உள்ளது. இங்கு 54 கி.மீ தூர முதல் கட்ட வழித்தடமும், 118.9 கி.மீ தூர இரண்டாம் கட்ட வழித்தடமும் இணைகின்றன. இந்த இரண்டு வழித்தடங்களையும் எளிதாக இணைக்க, ஒரு ஆகாய நடைபாதை கட்டப்பட உள்ளது.
இந்த ஆகாய நடைபாதை, முதல் கட்ட மெட்ரோ நிலையத்தின் டிக்கெட் வழங்கும் தளத்தில் இருந்து, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையத்தின் டிக்கெட் வழங்கும் தளத்திற்கு நேரடியாகச் செல்லும் வகையில் அமைக்கப்படும். இதன் மூலம் பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் ஒரு வழித்தடத்தில் இருந்து மற்றொரு வழித்தடத்திற்கு மாற முடியும்.
ஆகாய நடைபாதை
இந்த ஆகாய நடைபாதைக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய மூன்று மாதங்களும், கட்டுமானத்தை முடிக்க ஆறு மாதங்களும் ஆகும். சுமார் ரூபாய் 12 கோடி செலவில் இந்த ஆகாய நடைபாதை கட்டப்படும். இந்த ஆகாய நடைபாதையின் நீளம் சுமார் 130 மீட்டர் மற்றும் அகலம் 6 மீட்டர். இது ஒரு மூடிய நடைபாதையாக இருக்கும்.
வடபழனி இரண்டாம் கட்ட மெட்ரொ ரயில் நிலையத்தை அடுத்த ஆண்டு திறக்க திட்டமிட்டுள்ளதால், ஆகாய நடைபாதைக்கான பணியை இப்போதே தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆகாய நடைபாதை கட்டப்படுவதால், மெட்ரோ ரயில் பயணிகள் மிகவும் பயனடைவார்கள். குறிப்பாக, பூந்தமல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் பயணிகள், வடபழனியில் எளிதாக ரயில்களை மாற்றிக்கொள்ள முடியும்.
பயணிகள் மெட்ரோ நிலையத்தை விட்டு வெளியே வந்து, சாலை வழியாக வேறு வழித்தடத்துக்கு மாறுவது சிரமமாக இருக்கும். எனவே ஆகாய நடைபாதை ஒரு நல்ல தேர்வாக இருக்கும். எனவே இரண்டு வழித்தடங்களையும் எளிதாக இணைக்க ஆகாய நடைபாதை கட்டப்பட உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications