புத்தாண்டு கொண்டாட்டம்.. இந்த ‘பீச்’களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.. காவல்துறை அதிரடி அறிவிப்பு!
சென்னை : டிசம்பர் 31ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் உள்ள கடற்கரைப் பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் சென்னையில் உள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆண்டும் சென்னையில் உள்ள மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட சென்னை காவல்துறை தடை விதித்துள்ளது. பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிசம்பர் 31 அன்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை காவல்துறை அறிவிப்பு
சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வைரஸால் உலக நாடுகளில் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

அனுமதி இல்லை
2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிசம்பர் 31ஆம் தேதி அன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் உள்ளிட்ட அனைத்து கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

8 மணிக்கு மேல் வர வேண்டாம்
இதனால் பொதுமக்கள் டிசம்பர் 31 அன்று இரவு 8 மணிக்கு மேல் சென்னையில் உள்ள எந்தவொரு கடற்கரை மணற்பகுதிக்கும் வரவேண்டாம் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை காவல் ஆணையர்
முன்னதாக, புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் துறை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் "சென்னையில் பைக் ரேஸை தடுக்க சோதனைச் சாவடிக்ள அமைக்கப்படும். மொபைல் கண்காணிப்பு வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இரவில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது. மரணம் இல்லாத புத்தாண்டாக இந்தப் புத்தாண்டு அமைய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

ஹோட்டல்களுக்கு கட்டுப்பாட்டு
மேலும், கடற்கரை சாலையில் இரவு 7 மணிக்கு மேல் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. ரோந்து வாகனங்களில் சிசிடிவி கேமரா வைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். புத்தாண்டுக் கொண்டாட்டம் தொடர்பாக விடுதிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மொத்த இருக்கையில் 80 சதவீதத்திற்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நட்சத்திர விடுதிகளில் இரவு 1 மணிக்குள் நிகழ்ச்சிகளை முடித்துக்கொள்ள வேண்டும். போதைப் பொருட்களை பயன்படுத்தும் நட்சத்திர விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications