இன்றிரவு சென்னையில் மேம்பாலங்களில் செல்ல அனுமதியில்லை.. 75 மேம்பாலங்களும் மூடப்படுகிறது.. அதிரடி!
சென்னை: இன்றிரவு சென்னையில் மேம்பாலங்களில் செல்ல அனுமதியில்லை. 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட 75 மேம்பாலங்கள் மூடப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அறிவித்துள்ளது சென்னை போலீஸ்.
சென்னையில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டும். மெரினா கடற்கரை சாலை தொடங்கி, அண்ணா சாலை, கோயம்பேடு சாலை என எந்த சாலையில் பார்த்தாலும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடும் இளைஞர்கள் பைக் ரேஸில் செல்வார்கள்.
மதுபோதையில் வாகனங்களை அதிகவேகத்தில் ஓட்டிக்கொண்டு ஹேப்பி நியூ இயர் என கத்திக்கொண்டே இளைஞர்கள் செல்வது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. அப்படி செல்லும் போது விபத்து ஏற்படும் தொடர்கதையாக உள்ளது. இதில் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களும் நடக்கிறது.

இளைஞர் கூட்டம்
இதைத்தடுக்க என்னதான் கண்காணிப்புகளை போலீசார் மேற்கொண்டாலும், அபராதம் விதித்தாலும் அன்றைக்கு கட்டுக்கடங்காத அளவுக்கு புத்தாண்டு தினத்தில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

செல்ல தடை
எனவே விபத்தை தடுக்க சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட 75 மேம்பாலங்களை போலீசார் இன்று மூடுகிறார்கள். சென்னையில் இன்று இரவு மேம்பாலத்தில் செல்ல வாகனங்களுக்கு அனுமதி தரப்படாது.

அனுமதியில்லை
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "12 மணிக்குப் பிறகு இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னையில் உள்ள மேம்பாலங்களில் ‘பைக் ரேஸ்' நடத்தினார்கள். எனவே இந்த ஆண்டு அதைத் தடுக்கும் வகையில் இன்றிரவு சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட 75 மேம்பாலங்கள் மூடப்படும். இன்றிரவு மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது.

வாகனம் பறிமுதல்
பைக்கில் வருபவர்கள் மது அருந்தி இருந்தால், அவர்கள் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். மது அருந்தியவர்கள், வேறு வாகனங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்படும். மறுநாள் காலை உரியவர்கள் தக்க ஆவணங்களுடன் வந்து மோட்டார் சைக்கிளை திரும்ப பெற்றுச் செல்லலாம்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications