"கோவை கார் வெடிப்பு சம்பவம்.. அண்ணாமலையை அழைத்து என்ஐஏ விசாரிக்கட்டும்" - கனிமொழி எம்.பி.!
சென்னை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் என்ஐஏ அதிகாரிகள் அண்ணாமலையை அழைத்து விசாரிக்கட்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் உள்ள நூலகத்தில் 'நவீனக் கல்வி கொள்கையை நோக்கி மெக்காலே கூறியது என்ன' என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்த நூலை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வெளியிட்டார். அதன் முதல் பிரதியை மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பெற்றுக் கொண்டார்.

மெக்காலே கல்விக் கொள்கை
பின்னர் நிகழ்ச்சியில் கனிமொழி பேசுகையில், "புத்தகத்தை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நமது சுய மரியாதையை, நமது கல்வியை கெடுத்தது மெக்காலே தான் என்று தவறான பொய்யுரைகளை ஒரு சிலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகின்றனர். இங்கே உயர் பதவியில் இருப்பவர்கள் கூட, எந்த நாடும் ஒரு மதத்தை சாராமல் இருக்க முடியாது என்று சொல்கின்றனர். ஆனால் உலகில் நிறைய நாடுகள் மதச்சார்பற்ற நாடாக தான் உள்ளது.

கல்வி பற்றி கனிமொழி
கல்வி என்பது அனைவருக்கும் பொதுவானது என்று மெக்காலே கூறியதால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர் கருத்தை இவர்கள் ஏற்பதில்லை. ஒரு காலத்தில் கிளெர்க் வேலை கிடைக்க கூட நமக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தது. அந்த வேலைக்கும் அவர்கள் தான் போய் கொண்டு இருந்தார்கள். நான் உட்கார்ந்து இருக்கிற இடத்தின் பக்கத்தில் நீ வந்து உட்காருகிறாய் அல்லவா. அந்த இடத்திற்கு உன்னை கொண்டு வந்த கல்விக் கொள்கையை நாங்கள் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டோம்.

திராவிட இயக்க சாதனை
இருபதாயிரம், முப்பதாயிரம் புத்தகங்களை படித்தவர்களுக்கு கூட இந்த புத்தகத்தை அனுப்பி வைக்கலாம். இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளில் அறிவியல் குறித்து எத்தனை புத்தகங்கள் உள்ளது. இது எல்லாம் இவர்களுக்கு கிடைக்க கூடாது என்று நினைத்ததை, திராவிட இயக்கம் உடைத்து மக்களுக்கு சேர்த்தது. நமது கல்வி கொள்கை, ஒரே ஒரு மாணவன் இருந்தாலும், அவர்களுக்கும் கல்வி தர வேண்டும் என்பதே. பாட புத்தகத்தில் சரித்திரத்தை மாற்றி எழுதி வருகிறார்கள் என்று தெரிவித்தார்.

இந்தி திணிப்பு
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கனிமொழி கூறுகையில், "மெக்காலே கல்விக் கொள்கையை பற்றி தொடர்ந்து பொய் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்தி திணிப்பு இந்த நாட்டின் ஒற்றுமைக்கு நிச்சயமாக எதிரான ஒன்று.

மக்களால் உருவாக்கப்பட்டது
மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் மீது திணிக்கப்படும்போது கண்டிப்பாக அதற்கு எதிர்வினை உண்டு. இந்தியா என்பது மக்களால் உருவாக்கப்பட்டது. பல்வேறு மதங்கள், மொழிகள், நம்பிக்கைகளால் சேர்ந்தது தான் இந்தியா. இதை சிதைக்க வேண்டும் என நினைப்பது மிகப்பெரிய தவறு என்று தெரிவித்தார்.
தொடர்ந்து கோவை சம்பவத்தில் என்ஐஏ அதிகாரிகள் அண்ணாமலையை அழைத்து விசாரிக்கட்டும். அதற்கு அண்ணாமலை பதில் சொல்லட்டும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications