நிர்மலா தேவி வழக்கு.. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்க.. மகளிர் கோர்ட்டுக்கு ஹைகோர்ட் கிளை உத்தரவு!
நிர்மலா தேவி விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: நிர்மலா தேவி விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் தனது கல்லூரி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளார்.
இது குறித்து ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் மாணவிகளின் புகாரின் பேரிலும் அருப்புக் கோட்டை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
தொடர் விசாரணை
வழக்கை சிபிசிஐடி போலீஸார் இரண்டு மாதத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை குறித்து இடையில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கையை தொடர்ந்து நிர்மலா தேவியிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டது. அதன்பின் விசாரணை அறிக்கை ஸ்ரீவில்லிபுத்துர் மகளிர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.
பரபரப்பு அறிக்கை
இந்த வாக்குமூலத்தில் பல பரபரப்பு தகவல்களை நிர்மலா தேவி தெரிவித்து இருந்தார். தன்னுடைய குடும்ப வாழ்க்கை குறித்தும், ஆண்களுடன் ஏற்பட்ட தொடர்பு பற்றியும், கணவனுடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் வாக்குமூலம் அளித்து இருந்தார். கல்லூரி பெண்களை எப்படி அழைப்பேன் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
இந்த நிலையில் இந்த வாக்குமூலம் மற்றும் விசாரணை தொடர்பான அறிக்கையை சிபிசிஐடி போலீசார் ஏற்கனவே ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருந்தனர். சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சீலிட்ட கவரில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றுள்ளது.
ஏற்கனவே அளித்தார்
ஏற்கனவே நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக விசாரிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விசாரணை குழுவை நியமித்து இருந்தார். விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்தார். இந்த விசாரணை அறிக்கையை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் ஆளுநரிடம் சமர்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.