ஒரே அறிவிப்பில்.. டாப் கியர் போட்டு தட்டி தூக்கிய மத்திய அரசு.. இடம்பெயர் தொழிலாளர்கள்.. வேலை, உணவு!
தொழிலாளர்களுக்கு சிறப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர்
சென்னை: ஒரே அறிவிப்பில் டாப் கியர் போட்டு அடித்து தூக்கி விட்டது மத்திய அரசு.. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை, உணவு என அத்தனை அம்சங்களையும் வழங்க அதிரடி அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
கூலி வேலை செய்தால்தான் சாப்பாடு என்ற எழுதப்பட்ட விதியுடன் நகர்ந்தவர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள்.. இன்னதுதான் வேலை, இன்னதுதான் வருமானம் என்று நிச்சயமில்லாதவர்கள்.. காய்கறி விற்பவர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் என நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலங்களிலும் பரந்து விரிந்துள்ளனர். லாக்டவுன் போட்ட நாள் முதல் இப்போது வரை இவர்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
எத்தனையோ பேர் வழியிலேயே சுருண்டு விழுந்தனர்.. பசியால் கால்கள் நடுங்கி சென்றனர்.. குழந்தைகள் பசிக்குது என்று வாய்விட்டு கேட்டாலும் எதையும் வாங்கி தர முடியாத சூழலில் பலர் புலம் பெயர்ந்தனர்.. "பசியில் கிடந்து சாகிறதைவிட, கொரோனா வந்தே சாகறோம்" என்று விரக்தியுடன் நடையை கட்டி வருகின்றனர்!!
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்.. ஆக. 20-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும்.. நிர்மலா சீதாராமன் அதிரடி!
குழந்தைகள்
"அம்மா எதுக்காக அழறாங்க.. அப்பா ஏன் நமக்கு சாப்பிட எதுவுமே தரல" என்ற வலியான கேள்விகளுடன் குழந்தைகளும் மலங்க மலங்க விழித்து பெற்றோருடன் பயணப்பட்டனர்.. இன்றுகூட ஒரு கர்ப்பிணி பெண்மணி புலம்பெயர்ந்து நடந்து வந்தபோது, நடுரோட்டிலேயே குழந்தையை பெற்றுக் கொண்டு, திரும்பவும் நடக்க ஆரம்பித்துள்ளார். இந்த அவலம் நம் தமிழகத்திலும் நடந்ததுதான் கொடுமையே.. "எங்களை ஊருக்கு அனுப்ப போறீங்களா இல்லையா" என்று கேட்டு போலீசார் மீதே தடியடி நடத்தினர்.
சோனியா காந்தி
எப்படி பார்த்தாலும் ஆயிரக்கணக்கானோரை இப்படி ஆங்காங்கே ஒரே இடத்தில் குழும செய்து அரசின் பெரும் தோல்வியாகவே பார்க்கப்பட்டது.. எதிர்க்கட்சிகள் இதனைதான் இன்றுவரை விமர்சித்து வந்தனர்.. சோனியா காந்தி இவர்களை பற்றி அதிகமாக தன் கவலையை வெளிப்படுத்தினார்.. இதனிடையே பிரதமர் நம்மிடம் 3 முறை பேசிவிட்டார்.. முதலமைச்சர்களிடம் 4 முறை பேசிவிட்டார்.. அப்போதுகூட அவர் புலம்பெயர் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகளின் நலன் பற்றி எதுவுமே சொல்லவில்லை.. நேற்றுமுன்தினம் அரை மணி நேரம் பேசியபோதும், புலம்பெயர்ந்து உயிரிழந்த 14 பேருக்காக ஒரு இரங்கல்கூட சொல்லவில்லை.. இது அனைத்து தரப்பையுமே பாதித்தது.
பாதிப்புகள்
இந்நிலையில்தான் நேற்று நிதியமைச்சர் முதல்கட்ட நிதியினை அறிவித்தார்.. எப்படியும் இந்த தொழிலாளர்கள் நலன்குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலும் ஏமாற்றமே மிஞ்சியது.. முறையான திட்டமிடல் இல்லாததும், எடுத்த எடுப்பிலேயே முடிவுகளை அறிவித்து அதனை தடாலடியாக மக்கள் மீது திணிப்பதும், அதனால் மீண்டும் மீண்டும் மக்கள்தான் பாதிப்படைகிறார்கள் என்பதும் தொடர் சோகமாகி வருகிறதே என்ற புலம்பல்களும் எழுந்தபடியே இருந்தன.
ப.சிதம்பரம்
இதை பற்றி ப.சிதம்பரம் சொல்லும்போது, ''மத்திய அரசு ரூ.3.6 லட்சம் கோடிக்குப் பிணையில்லாத கடனை சிறு தொழில்களுக்கும், வர்த்தகத்துக்கும் அறிவித்துள்ளது. அப்படியென்றால் மீதமுள்ள ரூ.16.4 லட்சம் கோடி எங்கே- லட்சக்கணக்கான ஏழைகள், பசியோடும், விரக்தியோடும் உள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடந்து சொந்த ஊர் சென்று கொண்டிருக்க, அவர்களுக்கு மத்திய நிதியமைச்சர் அறிவிப்பில் ஏதுமில்லை" என்று தன ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அறிவிப்பு
இவ்வளவும் இன்று நடந்து முடிந்த நிலையில்தான், நிர்மலா சீதாராமன் தொழிலாளர்களின் வயிற்றில் பாலை வார்ப்பது போல ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், வேலைகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஊரக வளர்ச்சி துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஒரு நல்ல செய்தியை சொல்லி உள்ளார்.
100 நாள் வேலை திட்டம்
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தொழிலாளர்களை கண்டறிந்து பதிவு செய்யும் பணிகள் நடைபெறுவதுடன், தொழிலார்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய தேசிய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கப்படு என்றும் தெரிவித்துள்ளார்.. இதைவிட முக்கியமாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த 100 நாள் வேலைத் திட்டத்தில் பணியாளர்களுக்கு ஊதியமாக ரூ.10,000 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருக்கிறது.
ரேஷன் பொருட்கள்
இவர்களுக்கு 2 மாதம் இலவச அரிசி உள்ளிட்ட உணவுப்பொருட்கள், இலவச உணவு தானியங்களும் வழங்கப்பட உள்ளது.. ஒருவேளை ரேஷன் கார்டு இல்லை என்றாலும் அரிசி அல்லது கோதுமை தலா 5 கிலோ வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது கூடுதல் சிறப்பு! சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்குவதற்காக ரூ.50,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கடன் திட்டத்தில் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயன்பெறுவார்கள் என்றும் நம்பிக்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இவர்களின் வாழ்வாதாரத்துக்கு இப்போதாவது ஒரு விடிவுகாலம் கிடைத்ததே என்ற நிம்மதியும் ஏற்பட்டுள்ளது.
முதுகெலும்புகள்
நாட்டின் முதுகெலும்புகளான தொழிலாளர்கள், இப்படி வளைந்து ஒடிந்து நசுங்கி விழுந்து கொண்டிருக்கிறார்களே வேதனையில் இருந்த நேரம் நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு வரவேற்புக்குரியதாக உள்ளது. அதே சமயம், இது மிக மிக தாமதமான அறிவிப்பு என்பதையும் ஒப்பு கொண்டே ஆகவேண்டும்.. எப்போதுமே அரசின் வார்த்தைக்கும் - மக்களின் வாழ்க்கைக்கும் உள்ள இடைவெளிதான் அரசின் மீதான நம்பகத்தன்மையை தீர்மானிக்கிறது.. அந்த நம்பக தன்மையை மத்திய அரசு இந்த ஒரே அறிவிப்பில் வெகு சுலபமாக பெற்றுவிட்டது என்றே சொல்லலாம்!!