அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவு! வால்பாறை சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தலா?
சென்னை: வால்பாறை தொகுதியின் அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற கேள்விக்கு அது போல் நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வால்பாறை சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என தேர்தல் ஆணையத்திடம் கேட்டதற்கு வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள் எம்எல்ஏ மறைந்துவிட்டால் இடைதேர்தல் கட்டாயம் நடத்த வேண்டும் என்ற விதிமுறை இல்லை.

தமிழக சட்டசபை 2026, மே 9ஆம் தேதி முடிவடையும் நிலையில் தற்போதைக்கு வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை. கடந்த 2020 ஜூன் 10 இல் சேப்பாக்கம் எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இறந்த போதும் இடைத்தேர்தல் நடத்தவில்லை. எனவே வால்பாறைக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அமுல் கந்தசாமி. கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆறுமுகத்தை விட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அமுல் வென்றார்.
அந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டவர்களில் முதலாவதாக வெற்றியை உறுதி செய்தவரும் அவர்தான். இவர் சிறுவயது முதலே அதிமுகவில் இருந்து வந்தார். ஊராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளை வகித்திருக்கிறார்.
கடந்த முறை முதல் முறையாக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டார். இவர் அன்னனூர் பகுதியை சேர்ந்தவர் என்றாலும் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இவருக்கு அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அமுல் கந்தசாமி, கடந்த 21 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார். இதனால் இந்த வால்பாறை தொகுதி காலியாகிவிட்டது.
பொதுவாக ஒரு எம்எல்ஏவோ, எம்பியோ தவறிவிட்டாலோ அல்லது ராஜினாமா செய்துவிட்டாலோ அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு கோடை விடுமுறையில் தேர்தல் நடத்தப்படும்.
எனவே வால்பாறைக்கு இடைத்தேர்தல் இந்த ஆண்டு நடத்தப்படுமா என்ற குழப்பம் எழுந்தது. அது குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேட்ட போது அது போல் நடத்த வாய்ப்பில்லை என சொல்லிவிட்டது. அதாவது தேர்தலுக்கு முந்தைய ஓராண்டுக்குள் இறந்துவிட்டதால் வால்பாறைக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாது என தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications