ஜுலை 1ம் தேதி சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்? புதிய தகவல்
சென்னை: ஜுலை 1ம் தேதி சட்டப்பேரவை கூடும் போது சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.
வருகிற 28-ந்தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு ஜுன் முதல் வாரத்தில் சட்டப்பேரவை தமிழகத்தில் கூடியிருக்க வேண்டும்.
ஆனால் 3 வாரம் தாமதமாக ஜுன் 28ம் தேதி சட்டப்பேரவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாத காலம் நடக்கப்போகும் இந்த கூட்டத்தொடரில் பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் குறித்து விவாதம் நடக்க உள்ளது.
இதனிடையே, ஏற்கனவே சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என திமுக கடிதம் கொடுத்துள்ளது. இதன்படி தீர்மானம் இந்த கூட்டத்தொடரில் முன்மொழியப்பட வாய்ப்பு உள்ளது.

திமுக அளித்துள்ளது
சட்டப்பேரவை சபாநாயகர் அல்லது துணை சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அரசியல் அமைப்பு சட்டத்தின் 179-வது பிரிவு அனுமதி அளிக்கிறது. அதன்படி சட்டமன்ற செயலாளருக்கு 14 நாட்களுக்கு முன்பாக எழுத்து மூலமாக தீர்மானம் கொடுக்கப்படவேண்டும். அதன் பிரதி சபாநாயகருக்கும் வழங்கப்பட வேண்டும். சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஏற்கனவே சட்டப்பேரவை செயலாளரிடம் திமுக கொடுத்துவிட்டது.

சபாநாயகருக்கு எதிராக
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அன்றையதினம் சட்டப்பேரவை கூட்டத்துக்கு தலைமை வகிப்பவர் அந்த தீர்மானத்தை சபைக்கு படித்துக்காட்டுவார்.

அனுமதி கிடைத்துவிடும்
அப்போது அதை கொண்டுவர விரும்பும் உறுப்பினர்கள், அவர்கள் இருக்கும் இடங்களில் எழுந்து நிற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள். 35-க்கும் அதிகமானவர்கள் எழுந்து நின்றால் தீர்மானத்தை கொண்டுவர அனுமதி கிடைத்துவிட்டதாக எடுத்துக்கொள்ளப்படும்.

7 நாளில் நடக்கும்
இதையடுத்து சபாநாயகர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான விவாதம் உடனடியாக தொடங்கும். அல்லது 7 நாட்களுக்குள் ஒரு நாளில் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடக்கும்..

மறைந்த எம்எல்ஏக்களுக்கு இரங்கல்
28-ந்தேதி சட்டசபை தொடங்கும் நாளில் சமீபத்தில் மறைந்த சூலூர் எம்.எல்.ஏ. கனகராஜ், விக்ரவாண்டி எம்.எல்.ஏ. ராதாமணி ஆகியோருக்கும், மரணம் அடைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்படும். இதற்கான இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு முதல் நாள் கூட்டம் முடிவடையும்.

கட்சிகளின் பலம்
எனவே நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு 1-ந்தேதியோ அல்லது அதற்கு அடுத்த நாளோ இருக்க வாய்ப்பு உள்ளது. சட்டப்பேரவையில் அதிமுகவின் பலம் 123 ஆகவும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலம் 107 ஆகவும் உள்ளது.












Click it and Unblock the Notifications