திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி உண்டா இல்லையா.. தெளிவுபடுத்துவாரா ராமதாஸ்?
Recommended Video
சென்னை: சொல்லுங்கள் டாக்டர் சொல்லுங்கள், திராவிட கட்சிகளோடு இனிமேல் கூட்டணி இல்லவே இல்லை என்றீர்களே டாக்டர்.. இப்படி நாம் கேட்கவில்லை. பலரும் கேட்கிறார்கள்.
- எனது குடும்பத்தில் யாரவது அரசியலுக்கு வந்தால் சவுக்கால் அடியுங்கள்
- வாய்ப்பு கிடைத்தால் தலித் ஒருவரையே முதல்வர் ஆக்குவோம்
- காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்திருக்கிறேன்.
மேற்கண்ட வாசகங்கள் தமிழக மக்களுக்கு பரிச்சயமான வாக்கியங்கள். இவையெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உதிர்த்த முத்துக்கள். வன்னியர் சங்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றியபோது ராமதாஸ் கூறினார் எனது குடும்பத்தில் யாராவது அரசியலுக்கு வந்தால் சவுக்கால் அடியுங்கள் என்று. ஆனால் சில காலத்திலேயே அவரது மகன் அன்புமணி ராமதாஸ் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டதோடு பாமகவில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டது.
இன்றளவும் அவர் இளைஞர் அணி தலைவராக உள்ளார். அதோடு திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்த பாமக மத்திய அரசில் அங்கமும் வகித்தது. அப்போது தனது மகன் அன்புமணி ராமதாசையே அவர் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார். அதன் பின்னர் இன்றளவும் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவே தொடர்கிறார். இப்படியாக இந்த கட்டுரையின் முதல் வரிக்கு முற்றுப் புள்ளி வைத்தார் டாக்டர் ராமதாஸ்.
இரண்டாவது வரி - வாய்ப்பு கிடைத்தால் தலித் ஒருவரை முதல்வர் ஆக்குவோம் – 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது அதிமுக ஓரணியாகவும் திமுக ஓரணியாகவும், மக்கள் நலக்கூட்டணி ஓரணியாகவும் களத்தில் நிற்கிறது இவர்களோடு தனி அணியாக களம் கண்டது பாமக. மாற்றம், முன்னேற்றம் அன்புமணி என்ற ஸ்லோகனோடு அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவின் தேர்தல் பரப்புரை பாணியில் தமிழகத்தில் களம் கண்டார் அன்புமணி ராமதாஸ். பாமகவின் முதல்வர் வேட்பாளர் என்று அன்புமணி ராமதாஸ் முன்னிறுத்தப்பட்டார். தமிழகம் முழுவதும் சுற்றி சுற்றி வந்தார் முதல்வர் வேட்பாளாரான அன்புமணி. பாமகவின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு முதல்வர் வேட்பாளரை அறிமுகப்படுத்தி களம் கண்டது. அப்போது அவர்கள் வாக்குறுதி படி அவர்கள் முன்னிறுத்தியது தலித் வேட்பாளர்தானா என்ற கேள்விக்கான விடையை டாக்டர் ராமதாசும், அன்புமநியும்தான் கூற வேண்டும்.
அடுத்தது முத்தாய்ப்பான மூன்றாவது வரி - காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை திமுகவுடனும், அதிமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கொள்கை முடிவு எடுத்து அறிவித்திருக்கிறேன். கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் இனிமேல் இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை. எங்களின் முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதிலிருந்து நாங்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். என்று அழுத்தம் திருத்தமாக அறிக்கை விட்டார். அந்த அறிக்கையில் தான் திமுக தலைவர் கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியபோதே தனது முகநூல் பக்கத்தில் இளைஞர்கள் பலர் வாழ்த்து கூறியதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் அவர்களோடு கூட்டணி வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் அந்த அறிக்கையில் கூறிய ராமதாஸ் தலைவர்களின் பிறந்த நாள்களில் வாழ்த்து கூறுவது அரசியல் நாகரீகம் என்றும் அது இங்கே அரசியல் ஆக்கப்படுகிறது என்றும வருத்தப்பட்டிருந்தார். ஆனால் அதற்கு முன்னர் திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமியின் பொன்விழா நிகழ்ச்சி அறிவாலயத்தில் நடைபெற்றதால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அதன் பின்னர் ஆற்காடு வீராசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாகவும் குறிப்பிட்டவர் கட்சி என்பது வேறு, நட்பு என்பது வேறு. அதிமுகவுடனும், திமுகவுடனும் எந்தக்காலத்திலும் கூட்டணி இல்லை என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவு ஆகும் என்பதை ஆற்காடுவீராசாமிக்கும் தெளிவுபடுத்தியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
முத்தாய்ப்பாக அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதில் மற்ற யாரையும் விட தான் தெளிவாக இருப்பதாகவும் இந்த விஷயத்தில் யாருக்கும் மனத்தடுமாற்றம் தேவையில்லை, தெளிவாக இருங்கள். அதிமுக, திமுக அல்லாத அரசை தமிழகத்தில் அமைத்தே தீருவது என்பதில் பாட்டாளி மக்கள் கட்சி மிக மிக மிக உறுதியாக உள்ளது என்று அறுதியிட்டு கூறியுள்ளார். இதற்கு பின்னர் பாமக இனிமேல் திராவிட கட்சிகளோடு கூட்டணியே வைக்காது என்றுதான் தமிழக பொது ஜனம் நம்பியது. ஆனால் திமுக மற்றும் அதிமுகவோடு பேசிக்கொண்டு இருப்பதாக அன்புமணி ராமதாஸ் கூறுகிறார். இன்னொரு பக்கத்தில் அதிமுக தலைவர்களும் நாங்கள் பாமகவுடன் பேசிக்கொண்டுள்ளோம் என்று கூறுகின்றனர். அதையும் தாண்டி அதிமுகவோடு கூட்டணியே உறுதி செய்யப்பட்டு விட்டது என்ற தகவலும் உலா வருகிறது.
இப்படி நம்பிய மிஸ்டர் பொது ஜனத்திற்கும் திராவிட கட்சிகள் இல்லாத அரசை அமைப்பதில் தீவிரமாக இருந்த உங்களது தொண்டர்களுக்கும் இப்போது என்ன பதில் கூறப் போகிறீர்கள் டாக்டர்?