அண்ணாமலை என்ன சொல்வது.. நாங்களே அதைதான் சொல்கிறோம்.. பண்ருட்டி ராமசந்திரன் பேட்டி!
அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்லத் தேவையில்லை என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை சொல்லத் தேவையில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக நீடிக்க உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று கூறிய பண்ருட்டி ராமச்சந்திரன், இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையமும் உச்சநீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மூலம் அதிமுக உட்கட்சி விவகாரம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்த நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு மூலம் இரு அணிகளும் ஒன்றாக களமிறங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு பின் இரு அணிகள் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்ட நிலையில், அதிமுக வேட்பாளரை வேட்பாளர் ஒப்புதல் படிவம் மூலம் தேர்வு செய்யும் முடிவுக்கு வந்துள்ளது.
இரட்டை இலை சின்னம்.. கையெழுத்திட தமிழ்மகன் உசேனுக்கு அதிகாரம்.. அதிமுக பொதுக்குழு தீர்மானம்!
பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி
இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை வெற்றிபெற வைக்க பாடுபடுவோம் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில், எங்களை பொறுத்தவரையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி நாங்கள் நடந்துகொள்வோம். எங்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் தீர்ப்பின் படியே நடப்போம். ஓ.பன்னீர் செல்வம் கட்சியிலேயே இல்லை என்றார்கள்.
ஓபிஎஸ் கட்சியில் இல்லையா?
ஆனால் இன்றைக்கு உச்சநீதிமன்றம் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுக்குழுவில் அவரை சேர்த்து கருத்தை கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்பின்னரே, பொது வேட்பாளரை தேர்வு செய்து தேர்தல் ஆணையத்திடம் சொல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக நீடிக்க உச்சநீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி சொல்லிக்கொண்ட இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.
அண்ணாமலை என்ன சொல்வது?
தொடர்ந்து, ஓபிஎஸ் தனது வேட்பாளரை வாபஸ் வாங்க வேண்டும் என்று அண்ணாமலை வேண்டுகோள் வைத்தது பற்றிய கேள்விக்கு, நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை என்ன சொல்வது. நாங்களே அதனைதான் வலியுறுத்தி வருகிறோம். ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே சொல்லி வருகிறோம். இதனை சொல்வதற்கு அண்ணாமலை தேவையில்லை என்று தெரிவித்தார்.
வேட்பாளர் தேர்வு
தொடர்ந்து விண்ணப்ப படிவ முறை பற்றிய கேள்விக்கு, பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால், 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் அளிக்க வேண்டும். அதற்கான நேரமில்லை. அதனால் வேட்பாளர் ஒப்புதல் படிவம் மூலம் கருத்தை பெறுவதில் தவறேதுமில்லை. வேறு வேட்பாளர் வேண்டுமென்றால், அதிலேயே குறிப்பிடலாம் என்று தெரிவித்தார்.