தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதது.. பதற்றம் வேண்டாம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
சென்னை: தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் வீரியமில்லாதது, பதற்றம் வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லதே தவிர கட்டாயம் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
இந்தியாவிலும் கொரோனா பரவல் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. சென்னை மறைமலை நகரைச் சேர்ந்த 60 வயதான நபர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் நேற்று 38 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வந்ததன் காரணத்தால் 2023 மே 5 ஆம் தேதி வரை நெருக்கடி நிலை இருந்தது. தற்போது பரவும் கொரோனா வீரியமில்லாதது என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரவும் 19 வைரஸ்களின் மாதிரிகளை புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தோம். இந்த ஆய்வில் இவை வீரியம் இல்லாத கொரோனா வைரஸ் என்பது உறுதியாகி உள்ளது.
மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகளுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. அதில், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளது. அடிக்கடி கைகளை கழுவுதல், தும்மல், இருமலின் போது முகத்தை மூடுவது போன்ற வழக்கமான நடைமுறைகளை கடைபிடித்தால் போதுமானது. பதற்றம் வேண்டாம்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பொது இடங்களில் முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல, ஆனால் மாஸ்க் அணிவது நல்லது. இணைநோய் உள்ளவர்கள், முக கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிறப்பான மருத்துவமனை கட்டமைப்பு உள்ளது, அனைத்து மருத்துவமனைகளிலும் பிரத்யேக வார்டுகள் தயாராக உள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தல் வழக்கமான ஒன்றுதான்; பதற்றப்பட வேண்டியது இல்லை. கொரோனா தொடர்பான வதந்திகள்தான் மிகப்பெரிய நோய். இந்த வதந்திகளைக் கிளப்பாமல் இருப்பதுதான் நல்லது. சென்னையில் கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்படும் முதியவருக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்தன." தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications