“காங்கிரஸ் நிலைப்பாடு இதான்.. ஆனா, நீதிமன்றம் சொல்லிட்டா ஆட்சேபனை இல்லை” கே.எஸ்.அழகிரி சொல்வது என்ன?
சென்னை: அரசியல் கட்சிகள் இந்த 7 பேரை மட்டுமே தமிழர்கள் என்று நினைக்கின்றனவா? என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரறிவாளன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்க உள்ளது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு எழுவரையும் விடுதலை செய்வதில் காங்கிரஸுக்கு ஆட்சேபனை இல்லை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகம் தலைநிமிர்ந்து பீடு நடை போடுவதை உறுதி செய்யும் பட்ஜெட்! காங்கிரஸ் தலைவர் அழகிரி பாராட்டு
ராஜீவ் கொலை வழக்கு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையும் 2014ஆம் ஆண்டில் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இவர்கள் ஏழு பேரையும் விடுவிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பேரறிவாளன் மனு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையை நிறுத்தி வைத்து தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்க உள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேஷ்வர ராவ் தலைமையிலான அமர்வு இன்று பிற்பகல் 12 மணிக்கு இந்த வழக்கில் விசாரணை நடத்த உள்ளது.
ஏன் விடுதலை செய்யக்கூடாது
கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின்போது, பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தது உச்சநீதிமன்றம்.
பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் கேள்வியெழுப்பி இருப்பதால் இன்றைய விசாரணை மேலும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எஸ்.அழகிரி
இதற்கிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையில், காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதல் ஒரே நிலைப்பாட்டில்தான் உள்ளது. அரசியல் கட்சியினர், குழுக்கள் இந்த 7 பேரை மட்டுமே தமிழர்கள் என்று நினைக்கிறார்களா?
கடந்த 25 ஆண்டுகளாக 22 ஆயிரம் தமிழர்கள் சிறையில் உள்ளனர். அவர்களும் தமிழர்கள்தானே. இருப்பினும், நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு அவர்களை விடுதலை செய்வதில் காங்கிரஸுக்கு ஆட்சேபனை இல்லை." எனத் தெரிவித்துள்ளார்.