திருமணமான ஆண், வேறு பெண்ணுடன் 'லிவ்-இன்'உறவில் இருந்தால் குற்றம் அல்ல.. ஐகோர்ட்
சென்னை: திருமணமான ஒரு ஆண், மற்றொரு வயது வந்த பெண்ணுடன் அவரது சம்மதத்துடன் 'லிவ்-இன்'உறவில் இருந்தால், அதற்காக அவர் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒழுக்கத்தையும் , சட்டத்தையும் (Law) தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டும். சட்டப்படி ஒரு செயல் குற்றம் என்று வரையறுக்கப்படாத வரை, சமூகத்தின் கருத்துக்களோ அல்லது ஒழுக்க நெறிகளோ குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றத்தின் செயல்பாடுகளைத் தீர்மானிக்காது என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சமூகத்தின் பார்வையில் ஒரு விஷயம் 'தவறு' அல்லது 'ஒழுக்கக்கேடு' என்று கருதப்பட்டாலும், அது நாட்டின் சட்ட புத்தகத்தில் 'குற்றம்' என்று எழுதப்படாத வரை, ஒருவரைத் தண்டிக்க முடியாது. குடிமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதே கடமை என்று நீதிமன்றங்கள் கூறி வருகின்றன.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஒருவரும், ஏற்கனவே திருமணமான ஒரு ஆணும் பரஸ்பர சம்மதத்துடன் 'லிவ்-இன்' முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இதற்கு அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இதனிடையே அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், "திருமணமான இந்த நபர், எங்கள் மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். ஏற்கனவே திருமணமான ஒருவர் மற்றொரு பெண்ணுடன் வாழ்வது சட்டப்படி குற்றம்" என்று வாதிட்டார்கள்..
பெண்ணின் குடும்பத்தினர் தங்களைக் கொலை செய்துவிடுவோம் என மிரட்டுவதாகவும், 'கௌரவக் கொலை' செய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறி, அந்த ஜோடி பாதுகாப்பு கேட்டு உயர் நீதிமன்றத்தை அணுகினார்கள். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜே.ஜே.முனீர் மற்றும் தருண் சக்சேனா அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து. அப்போது நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முககிய அம்சங்களை பார்க்கலாம்
சட்டம் vs ஒழுக்கம்
திருமணமான ஒரு ஆண், மற்றொரு வயது வந்த பெண்ணுடன் அவரது சம்மதத்துடன் 'லிவ்-இன்' (Live-in) உறவில் இருந்தால், அதற்காக அவர் மீது எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாது. ஒழுக்கத்தையும் , சட்டத்தையும் தனித்தனியாகத்தான் பார்க்க வேண்டும். சட்டப்படி ஒரு செயல் குற்றம் என்று வரையறுக்கப்படாத வரை, சமூகத்தின் கருத்துக்களோ அல்லது ஒழுக்க நெறிகளோ குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நீதிமன்றத்தின் செயல்பாடுகளைத் தீர்மானிக்காது
கைது செய்யத் தடை
18 வயது பெண்ணுடன் லிவ் இன் உறவில் இருந்தவர் மீது பாரதிய நியாய சங்கிதா (BNS) பிரிவு 87-ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரை அடுத்த உத்தரவு வரும் வரை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
காவல்துறையின் கடமை
"ஒன்றாக வாழும் இரண்டு வயது வந்த நபர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது காவல்துறையின் அடிப்படை கடமை" என்று கூறி, ஷாஜஹான்பூர் எஸ்பி அந்த ஜோடியின் பாதுகாப்பிற்கு நேரிடையாகப் பொறுப்பேற்க வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடும்பத்தினருக்குக் கட்டுப்பாடு
பெண்ணின் குடும்பத்தினர் அந்த ஜோடியைத் தொடர்பு கொள்ளவோ, அவர்கள் இருக்கும் இடத்திற்குச் செல்லவோ அல்லது எந்த வகையிலும் மிரட்டவோ கூடாது என நீதிமன்றம் தடை விதித்தது. அத்துடன் குறிப்பிட்ட ஜோடியின் மனுவை ஏற்றுக்கொண்டு, அரசுத் தரப்பு இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த ஜோடிக்கு முழுமையான போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications