ரிலீசானாலும்.. அதிமுகவிலும், ஆட்சியிலும் சசிகலாவுக்கு இடம் கிடையாது.. ஜெயக்குமார் அதிரடி பேட்டி
சென்னை: அதிமுகவிலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடம் கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஓ.எஸ்.மணியன், இதுகுறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும் என்று தெரிவித்த நிலையில், ஜெயக்குமார் இவ்வாறு கூறினார்.
சென்னையில் இன்று பேட்டியளித்தார் ஜெயக்குமார். அப்போது அவரிடம், ஓ.எஸ். மணியன் அளித்த பேட்டி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுபற்றி ஜெயக்குமார் தனது பேட்டியில் அளித்த தகவல்கள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அப்படி என்னதான் கூறினார் என்கிறீர்களா? இதோ பாருங்கள்:
அடுத்தடுத்து 3 தமிழக அமைச்சர்களுக்கு கொரோனா.. மூடப்பட்டது தலைமைச்செயலகம்.. தடுப்பு பணி தீவிரம்!
தனிப்பட்ட கருத்து
அமைச்சர் ஓஎஸ் மணியன் இதுபற்றி கூறியது, தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம். அதற்குள் போக நான் விரும்பவில்லை. கட்சியினுடைய கருத்து ஏற்கனவே எடுத்த முடிவு மட்டும்தான். நேற்று இன்று நாளை, எப்போதும் ஒரே முடிவுதான்.
ஒரே முடிவு
ஒரே ஒரு குடும்பம் மற்றும் சசிகலா ஆகியோர் இல்லாமல் கட்சியையும் ஆட்சியையும் நடத்த வேண்டும் என்பதுதான் ஒரே முடிவு. அதில் எந்த மாற்றமும் கிடையாது. இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். சசிகலா மற்றும் அவர் குடும்பத்தாரை அதிமுகவில் இணைப்பதில்லை என்று, அதிமுக முடிவு செய்துள்ளதை இவ்வாறு ஜெயக்குமார் குறிப்பிட்டார்.
ஓஎஸ் மணியன் பேட்டி
முன்னதாக அமைச்சர் ஓ எஸ் மணியன் அளித்த பேட்டியில், சசிகலா சிறையில் இருந்து விடுதலையான பிறகு என்ன நடக்கும் என்பது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவர் அளித்த பேட்டியில், நான் சாதாரண மாவட்ட செயலாளர். இதில் முடிவெடுக்க வேண்டியது கட்சித்தலைமை. தலைமையை கேள்வி கேட்பது தான் சரியாக இருக்கும். இவ்வாறு மணியன் தெரிவித்தார். இந்த நிலையில் ஜெயக்குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
சசிகலாவுக்கு 4 வருடம் சிறை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர், அடுத்த ஆண்டு விடுதலை செய்யப்படுவார் என கூறப்பட்ட நிலையில், இப்போது, விரைவில் விடுதலையாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.