புதுப்பேட்டை பாணியில்.. மாப்பிள்ளையை ஓவர்டேக் செய்து.. தாலி கட்ட முயன்ற இளைஞர்! சென்னையில் திக் திக்
சென்னை: சினிமா படப் பாணியில் கடைசி நேரத்தில் மணமகளுக்குத் தாலி கட்ட இளைஞர் ஒருவர் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் தனுஷ் நடித்திருந்த புதுப்பேட்டைப் படத்தைப் பார்த்து இருப்பீர்கள். அதில் தனுஷ் நண்பரின் சகோதரிக்குத் திருமணம் நடக்க இருக்கும்.
அதற்குச் சிறப்பு விருந்தினராக தனுஷை அழைத்துச் சென்று இருப்பார்கள். அப்போது தாலியை எடுத்துக் கொடுக்க வேண்டிய தனுஷ் அப்படியே தாலியைக் கட்டிவிடுவார்,

பரபரப்பு
இதைப் பார்த்தும் அங்கிருந்தவர்கள் அப்படியே ஷாக் ஆகிவிடுவார்கள். அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இப்போது சென்னையில் அரங்கேறி உள்ளது. தாலி கட்டும் போது கடைசி நேரத்தில், மணமகன் கையில் இருந்த தாலியைத் தட்டிவிட்டு, இளைஞர் ஒருவர் மணப்பெண்ணுக்குத் தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணம்
வடசென்னை ஐ.ஓ.சி நெடுஞ்செழியன் நகர்ப் பகுதியில் வசித்துவரும் ரேவதி என்பவருக்கும் தண்டையார்பேட்டை நேதாஜி நகர்ப் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் நேதாஜி நகரில் அமைந்துள்ள முருகன் கோவிலில் இன்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இன்று காலை 6.30 மணி அளவில் முகூர்த்த நேரத்தில் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

தட்டிவிட்டான்
கோவிலில் மந்திரங்கள் ஓத, அனைத்து சம்பிரதாயங்களும் நடந்து முடிந்தன. காலை நேரம் என்பதால் கோயிலில் சற்று குறைவான ஆட்களே இருந்தனர். அப்போது புரோகிதர் தாலி எடுத்துக் கொடுக்க அதை மாப்பிள்ளை மணிகண்டன் கட்ட இருந்தார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில், அங்கிருந்த இளைஞர், மாப்பிள்ளை கையிலிருந்த தாலியைத் தட்டிவிட்டுள்ளான்.

தர்ம அடி
மேலும், மணமகளுக்கு அந்த நபர் தாலி கட்ட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைக் கவனித்த மணமகளின் சகோதரர், அந்த இளைஞரைப் பிடித்து தர்ம அடி கொடுத்தார். தாலி கட்ட முயன்ற அந்த நபர் சதீஷ் என்பது தெரிய வந்தது. விசாரித்துப் பார்த்ததில் அவர் மணமகளைக் காதலித்து வந்ததாகக் கூறுகிறார். இருப்பினும், மணமகள் இது தொடர்பாக எதுவும் கூறவில்லை.

விசாரணை
திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அனைவரும் தாலி கட்ட முயன்ற சதீஷை வெளுத்து வாங்கினர். பின்னர் அவரை போலீசாரிடமும் ஒப்படைத்தனர். திருமணத்தின் போது, திடீரென மணமகளுக்குத் தாலி கட்ட முயன்ற சதீஷிடம் போலீசார் இப்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், புதுப்பேட்டைப் படப் பாணியில் கடைசி நேரத்தில் மணப்பெண்ணுக்கு இளைஞர் தாலி கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications