தமிழகம் அருகே கரையை கடக்கும் இரு புயல்கள்.. வெளுக்க போகும் வடகிழக்கு பருவமழை.. தனியார் வானிலை மையம்
சென்னை: இந்தாண்டு இரு புயல்களுடன் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கும் என தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழைக் காலம் வரவிருக்கிறது. இந்த மழைதான் தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தையும் வேளாண்மையையும் செழிப்புடன் வைத்திருக்கும்.
அந்த வகையில் இந்த வடகிழக்கு பருவமழை வரும் அக்டோபர் 25-ஆம் தேதிக்கு பிறகு தொடங்கும் என சென்னை வானிலை மையம் கூறியிருந்தது.

புறநகர்
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றைய தினம் மாலை கனமழை பெய்தது. ஒரு மணி நேரத்தில் கனமழை வெளுத்து வாங்கியதால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. சுமார் ஒரு மணி நேர மழைக்கே நம் சிங்கார சென்னையின் சாலைகள் தாங்கவில்லை.

சென்னை
வடகிழக்கு பருவமழை பெய்யும் வரை இது போல் சென்னையில் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனியார் வானிலை மையம் கூறுகையில் குறைந்த நேரத்தில் நிறைய மழை பெய்தது மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. வடகிழக்கு பருவமழைக்கு முன்பே இத்தகைய மழை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நல்ல மழை
இது வடகிழக்கு பருவமழைக்கான தொடக்கம் என்றும் சொல்லலாம். இந்த பருவமழையில் வங்கக் கடலில் இரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும். அவை இரண்டும் தமிழகம் அருகே கரையை கடக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே வழக்கத்தை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்யும்.

நிறைய மழை
நேற்றைய தினத்தை போலவே குறைந்த நேரத்தில் அதிக மழையும் பதிவாகக் கூடும். மொத்தத்தில் இந்த வடகிழக்கு பருவமழை சூப்பர் டூப்பர் மழையாகும் என தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ரேடார், செயற்கைகோள் உள்ளிட்டவற்றின் உதவியுடன் கண்டறிந்து சொல்லப்படும் வானிலை அறிக்கைகள் எந்த நேரத்திலும் மாறுபட வாய்ப்புள்ளது.

கணிக்க முடியாது
இயற்கையை யாராலும் சரியாக கணிக்க முடியாது. அப்படி போவது போல் போகும், பின்னர் யூ டர்ன் எடுத்து வேறு பக்கம் திரும்பிவிடும். எனவே இந்த செய்தியை படித்துவிட்டு 2015- சென்னை வெள்ளம் போல் இருக்குமோ என யாரும் பீதி அடைய வேண்டாம்.












Click it and Unblock the Notifications