டிஆர்பி தேர்வுகளில் வடமாநிலத்தவர்? - அரசு அதிரடி முடிவு.. தமிழக இளைஞர்களுக்கு விரைவில் குட் நியூஸ்!
சென்னை : டிஆர்பி தேர்வுகளிலும், தமிழ் மொழித்தாள் கட்டாயம் என அரசாணை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிஆர்பி நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டது தமிழக இளைஞர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி போல டிஆர்பி-யிலும் தமிழ் தாளை கட்டாயமாக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பணியில் வடமாநிலத்தவர்
தமிழகத்தில் ரயில்வே, அஞ்சல்துறை உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்து வருகின்றனர். சமீபத்தில், அஞ்சல்துறை பணியில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

பாலிடெக்னிக் விரிவுரையாளர்
இந்த நிலையில்தான் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி தேர்விலும் ஏராளமான பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பியால் நடத்தப்படுகின்றன. டிஆர்பி கடந்தாண்டு 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தியது. இதில், ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு 2,148 நபர்களை அழைத்துள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம்.

சான்றிதழ் சரிபார்ப்பு
சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற சான்றிதழ் சரிபார்ப்பில் பிற மாநிலங்களைச் சேர்ந்த பலரும் பங்கேற்றுள்ளனர். இதில் பலர் சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு தமிழகத்தில் பணியில் சேரக்கூடிய வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது. இதற்கு தமிழக இளைஞர்களின் வாய்ப்புகளை தட்டிப் பறிப்பதா என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அரசுக்கு வேண்டுகோள்
டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் உள்ளது போல ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தமிழ் மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. இதன் காரணமாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் பலர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கி அரசாணை வெளியிட வேண்டும் என தவாக தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் வேண்டுகோள் விடுத்தனர்.

விரைவில் நல்ல செய்தி
இந்நிலையில், தமிழகத்தில் வசிக்கும் தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே, தமிழக பள்ளி கல்லுாரிகளில் ஆசிரியர்களாக பணியாற்றும் வகையில், டி.ஆர்.பி தேர்வுகளில் தமிழ் கட்டாய தாள் அறிமுகம் செய்ய பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் உள்ளதுபோல, டி.ஆர்.பியும் தமிழ் மொழித் தாளை கட்டாயமாக்கும் அறிவிப்பை விரைவில் வெளியிடும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications