வடமாநிலத்தவருக்கு தமிழ்நாட்டில் வாக்கு உரிமை.. திமுகவின் மிகப்பெரிய ஊழல்.. எதிர்க்கும் நயினார்!
சென்னை: வடமாநில வாக்காளர்களைத் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது மிகப்பெரிய ஊழல் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். திமுகவிற்கு ஆதரவாக வடமாநில வாக்காளர்கள் சேர்க்கப்படுவதாக கூறிய நயினார் நாகேந்திரன், எத்தனை லட்சம் பேரைச் சேர்த்தாலும் திமுக ஆட்சி மாற்றப்படுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்றது. அதன்படி, பீகாரில் இருந்து வெளி மாநிலங்களுக்குக் குடி பெயர்ந்தவர்கள் பெயர் அங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில் எந்த தொகுதியில் வசிக்கிறார்களோ, அங்கு அவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.

இந்த கணக்கின்படி பார்த்தால், சுமார் 6.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் பணி செய்து வருகிறார்கள். இவர்களின் பெயர்கள் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதால், இனி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவிலான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் தமிழ்நாட்டின் அரசியலே மாறும் நிலை உருவாகி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விவாதிக்க விசிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், வடமாநிலங்களில் தொழிலாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்திருப்பது தவறானது. மிகப்பெரிய ஊழல். மேற்கு வங்கத்தைப் போல் நினைத்து கொண்டிருக்கிறார். இந்த 7 லட்சம் பேர் மட்டுமல்லாமல், எவ்வளவு பேரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தாலும், ஆட்சி மாற்றம் வருவது உறுதி.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில், இப்போதிருந்த மக்கள் திமுக மீது வெறுப்புடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். பீகார் வாக்காளர்களை தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முடிவுக்குத் தமிழக பாஜகவினர் மத்தியில் ஆதரவு இருந்தது. தமிழிசை செளந்தரராஜன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்த நிலையில், நயினார் எதிர்ப்பது விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications