பெரியாழ்வார் மண்.. “பல ராமசாமிகள் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார்கள்” - தமிழிசை பரபர பேச்சு!
சென்னை : பல ராமசாமிகள் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார்கள் என்றும் ஒரு ராமசாமிக்கு மட்டும் அதற்கான முழுப்பெருமையும் கிடையாது என்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
சர்வதேச சகோதரத்துவ தினத்தையொட்டி சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, நம் மதம் சகிப்புத் தன்மையை சொல்லிக் கொடுத்திருக்கிறது, விநாயகர் அழுக்கில் இருந்து எடுக்கப்பட்டார் என்று சொல்வதையும், பெரும்பான்மை மக்கள் வணங்கும் ஒரு விழாவிற்கு வாழ்த்து சொல்லவில்லை என்பதையும் சகித்துக் கொண்டிருக்கிறோம் எனப் பேசியுள்ளார் தமிழிசை.

ஒரு ராமசாமிக்கு மட்டும் இல்லை
தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சர்வதேச சகோதரத்துவ தினத்தையொட்டி சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், "ராமானுஜர் காலத்தில் இருந்தே சமூக நீதி பேசப்பட்டு வருகிறது. என்னைப் பொறுத்தமட்டில், ஒரு ராமசாமிக்கு மட்டும் அதற்கான முழுப்பெருமையும் கிடையாது. பல ராமசாமிகள் சமூக நீதிக்காக போராடி இருக்கிறார்கள்.

தேசியம்
தேசிய கருத்துக்கள் எங்கெல்லாம் பரப்பப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த ராமசாமி இருப்பார். ஏனென்றால் ராமசாமி என்றாலே ஏதோ தேசியத்திற்கு சம்பந்தமில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த ராமசாமிகளால் தான் தேசியம் பாதுகாக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் வாழ்த்து சொல்லாதது பற்றி
நம் மதம் மதித்தல், சகிப்புத் தன்மையை சொல்லிக் கொடுத்திருக்கிறது. அதன்படி சகித்துக் கொண்டிருக்கிறோம். அதோடு மற்ற மத கருத்துக்களை மதித்துக் கொண்டிருக்கிறோம். விநாயகர் அழுக்கில் இருந்து எடுக்கப்பட்டார் என்று சொல்வதையும் நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம். பெரும்பான்மையாக நாம் வணங்கும் ஒரு விழாவிற்கு வாழ்த்து சொல்லவில்லை என்றாலும் அதையும் நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம்.

பெரியாழ்வார் மண்
நமது குரலை உயர்த்திக் கொண்டே தான் இருக்க வேண்டும். இல்லையென்றால் பெரியாழ்வார் மண், பெரியார் மண்ணாக மட்டுமே முன்னிறுத்தப்பட்டு விடும். இன்று பேசப்படும் சமூக நீதி எல்லாம் ஆடம்பரத்திற்காகவும் விளம்பரத்திற்காகவும் தான். ஆனால் நாம் பேசும் சமூக நீதி ஆன்மாவிற்காக பேசப்பட்டது என்பதை விவேகானந்தர் சொல்கிறார்.

சமச்சீர் கல்வியா இது?
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் கிடைக்கும் கல்வி அரசாங்க பள்ளிகளில் முழுவதாக கிடைக்கிறதா?அனைத்து அரசியல்வாதிகளின் பிள்ளைகளும் அரசாங்க பள்ளிகளில் தான் படிக்கிறார்களா? சமச்சீர் கல்வி என்று பேசிக் கொண்டிருக்கிறோம் ஆனால் சமச்சீர் கல்வி என்று தமிழ்நாட்டில் இருக்கிறதா ? நீட் தேர்வை மாணவர்கள் முழுவதுமாக எதிர் கொள்ள முடிகிறதா?

சும்மா ஒண்ணும் வரல
தேசிய கல்விக் கொள்கை என்பது இரண்டு, மூன்று லட்சம் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்டு, பல லட்சம் மக்களிடம் கருத்துக் கேட்டு கொண்டுவரப்பட்டது. சும்மா ஒன்றும் கொண்டுவரவில்லை. எனவே உண்மையைத் தெரிந்துகொண்டு, புதிய கல்விக் கொள்கையை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். தேசியம் என்ற வார்த்தை வந்ததால் தேசியக் கல்விக் கொள்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனக் கூறுவது சரியல்ல" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications