நேற்று பெரியார் vs பிரபாகரன்.. இன்று பெரியார் vs அண்ணா.. சீமான் வெளியிட்ட திடீர் புகழார அறிக்கை!
சென்னை: தந்தை பெரியார் vs பிரபாகரன் என்று பேசி வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தற்போது தந்தை பெரியாருக்கு எதிராக பேரறிஞர் அண்ணா என அறிக்கை வெளியிட்டுள்ளார். சீமான் இன்று வெளியிட்ட அறிக்கையில், பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை.. பணம் கொடுத்து வாக்கைப் பறிக்கும் ஈனர்களிடம், தங்களின் சனநாயக உரிமையை அறியாமையால் ஏமாறும் மக்களைக் கண்டு 'தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா? என்று நெஞ்சம் கொதித்த இலட்சியவாதி என பேரறிஞர் அண்ணாவுக்கு திடீரென புகழாரம் சூட்டி உள்ளார்.
இது தொடர்பாக சீமான் இன்று வெளியிட்ட அறிக்கை: பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை..!

பணம் கொடுத்து வாக்கைப் பறிக்கும் ஈனர்களிடம், தங்களின் சனநாயக உரிமையை அறியாமையால் ஏமாறும் மக்களைக் கண்டு 'தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா? என்று நெஞ்சம் கொதித்த இலட்சியவாதி..!
'மதுவை விற்று வரும் வருமானம் குஷ்டரோகியின் கையில் வெண்ணெய்க்கு ஈடானது, என்று கூறி மதுவிலக்கை தன் உயிருள்ளவரை விலக்க மறுத்த மக்கள் தலைவர்..!
நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும், கொள்கைப்பற்றுறுதியையும் இனம்கண்டு, 'தம்பி வா தலைமையேற்க வா' என்று தனக்கடுத்துத் தலைமை பொறுப்பேற்க நாவலர் நெடுஞ்செழியனை அழைத்த நேர்மையாளர்..!
தமிழ் இலக்கியமும், தமிழர் வரலாறும் அரசியல் மேடைகளிலும் அதிகம் பேசப்படக்கூடிய வழக்கத்தை உருவாக்கிய பெருமகன்..!
அவதூறு பரப்புரைகளும், அரசியல் பழிவாங்கலும் இல்லாது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து நாகரீக அரசியல் மேற்கொண்ட பண்பாளர்..!
யாரும் படிக்க வைக்காமல் தன்னுடைய முயற்சியால் இரண்டு முதுகலை பட்டம் பெற்ற பேரறிஞர் பெருந்தகை..!
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்! இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளில் சீமான்
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா உள்ளிட்டோர் முன்வைத்த திராவிடம்தான் தமிழருக்கு எதிரானது என பேசிவந்தார் சீமான். பின்னர் தந்தை பெரியார்தான் தமிழருக்கு எதிரானவர்; தமிழ் சமூகத்தைச் சீரழித்தவர் என சீமான் பேச பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்தான் திராவிடம், பெரியாரை எதிர்க்க வேண்டும் என என்னிடம் சொன்னார் என்றார் சீமான். இதற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழ நாடு கடந்த அரசாங்கம் ஆகியவை எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. இந்த நிலையில் திராவிடம், திமுகவை கடுமையாக எதிர்க்கும் சீமான், திராவிட இயக்க முன்னோடியும்- திராவிட கட்சிகளின் நிறுவனருமான பேரறிஞர் அண்ணாவை தந்தை பெரியாருக்கு எதிராக முன்னிறுத்தும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications