ஆறுமுகசாமி ஆணையத்தில் சின்னம்மா என தெளிவாக உச்சரித்த ஓபிஎஸ்.. அதிமுகவில் சலசலப்பு
சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரான பன்னீர் செல்வம், சசிகலா குறித்த கேள்விகளுக்கு அவரது பெயரை குறிப்பிடாமல் சின்னம்மா சின்னம்மா என்றே கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு பல முறை சம்மன் அனுப்பியும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆஜராகவில்லை.
இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கால் 2019 இல் நிறுத்தப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.

சேப்பாக்கம்
இதையடுத்து அவர் நேற்று சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள ஆறுமுகசாமி ஆணைய அலுவலகத்தில் ஆஜராகினார். நேற்று காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும் மாலை 3 மணி முதல் 4 மணி வரையும் என மொத்தம் 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டன.

ஓபிஎஸ் கேள்விகள்
அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனும் சில சந்தேகங்களை எழுப்பினார். இந்த நிலையில் காவிரி பிரச்சினை கூட்டம் உள்ளிட்ட கேள்விகளுக்கு தெரியாது என்ற பதிலையே ஓபிஎஸ் தெரிவித்தார். அது போல் ஜெயலலிதாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை தவிர வேறு உடல் உபாதைகள் இருப்பது தனக்கு தெரியாது என்றும் தெரிவித்திருந்தார்.

சின்னம்மா
அது போல் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதாவை அம்மா என்று குறிப்பிட்ட ஓபிஎஸ், சசிகலா குறித்த கேள்விகளுக்கும் சின்னம்மா என்றே அழைத்தார். அது போல் இன்றைய தினம் தொடர்ந்த விசாரணையில் சசிகலா மீது தனிப்பட்ட முறையில் அபிமானமும் மரியாதையும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சலசலப்பு
இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவர் ஜெயந்தி விழாவில் சசிகலாவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் பேசியிருந்தார். இதனால் கடும் எதிர்ப்புகளை சந்தித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்த ஓபிஎஸ்ஸிடம் சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது.

அய்யோ சாமி
அதற்கு அவர் அய்யோ சாமி வாங்க போலாம் என பதிலளித்தார். இந்த பதில் "எதற்காக சசிகலாவுக்கு ஆதரவாக பேச வேண்டும், பின்னர் நிர்வாகிகளின் எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டும்" என நினைத்து கட்சியோடு ஒத்து போக எண்ணியே அப்படி பேசியதாக பார்க்கப்பட்ட நிலையில் இன்று சின்னம்மா என பேசியது அதிமுகவினரை அதிர்ச்சியில் உறைய வைத்தது. எடப்பாடி பழனிச்சாமி, சிவி சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் சசிகலா என்றே பெயர் கூறி குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications