ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓபிஎஸ் தீவிர ஆலோசனை! எடப்பாடி தரப்புக்கு டஃப் கொடுக்கும் வேட்பாளர் யார்?
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் வரும் 31 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கடைசி தேதி பிப்ரவரி 7ஆம் தேதி ஆகும்.
வேட்புமனுக்களை ஆய்வு செய்யும் தேதி 8 பிப்ரவரி. வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி தேதி பிப்ரவரி 10 ஆம் தேதியாகும். இந்த நிலையில் இந்த தொகுதியில் ஏற்கெனவே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்றுள்ளார். அவர் மாரடைப்பால் கடந்த ஆண்டு இறந்ததால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
அங்கே போனாலும் எடுபடாது.. சல்லி சல்லியாக உடையும் ஓபிஎஸ் பிளான்.. ஆஹா.. இவர் என்ன இப்படி சொல்லிட்டாரே
காங்கிரஸ் மீண்டும் போட்டி
இந்த நிலையில் இந்த தொகுதியை திமுக கூட்டணியிடம் இருந்து காங்கிரஸ் மீண்டும் கேட்டு பெற்றது. இந்த தொகுதிக்கு திருமகனின் சகோதரரை வேட்பாளராக களமிறக்க திட்டமிடப்பட்டது. ஆயினும் திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட காங்கிரஸ் தலைமை வாய்ப்பளித்துள்ளது. அவர் வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி வேட்புமனுதாக்கல் செய்கிறார்.
அதிமுக கூட்டணி
இந்த நிலையில் அதிமுக கூட்டணியை பொருத்தமட்டில் பாஜக தனித்து போட்டியிடும் என தெரிகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோ கடந்த முறை போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்த நிலையில் அந்த தொகுதியை எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டதற்கிணங்க அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்துவிட்டது.
மக்கள் நீதி மய்யம்
அது போல் மக்கள் நீதி மய்யத்தின் நிலைப்பாடு, ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவு அளிப்பது என்பதாகும். இந்த நிலையில் அதிமுக சார்பில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த வகையில் முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ். தென்னரசு, நந்தகுமார் ஆகிய மூவரில் ஒருவரை எடப்பாடி தரப்பு அறிவிக்கும் என தெரிகிறது.
எடப்பாடி பழனிசாமி
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இணையாக போட்டி வேட்பாளரை ஓபிஎஸ் நிறுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஓபிஎஸ்ஸோ பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிக்கும் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனது தரப்பில் யாரையாவது போட்டியிட வைப்பது தொடர்பாக அவர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
தீவிர ஆலோசனையில் ஓபிஎஸ்
இந்த ஆலோசனையில் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகரன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதிமுகவில் முக்கியஸ்தர்கள் பெரும்பாலும் எடப்பாடி தரப்பிடம் இருப்பதால் ஓபிஎஸ் தரப்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. போட்டி வேட்பாளரை ஓபிஎஸ் நிறுத்தினால் எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் வேட்பாளருக்கு ஈடு கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும். அந்த வகையில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
போட்டி வேட்பாளர் யார்
அப்படியே ஓபிஎஸ் போட்டி வேட்பாளரை நிறுத்தினாலும் எத்தனை வாக்குகள் வாங்குவார் என்பது சந்தேகமாக இருக்கிறார்கள். தற்போது இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்பது தெரியாத நிலையில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுயேச்சை சின்னத்தில் நிறுத்தப்படும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.