ஹையோ ஹையோ.. ஓபிஎஸ் நிலைமையை பார்த்தீங்களா.. வேறு வழியில்லை.. எடப்பாடி தரப்பு அட்டாக்
ஓபிஎஸ் தரப்பு வேறு வழியின்றி பின்வாங்கியுள்ளதாக செம்மலை தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து வேறு வழியின்றி ஓபிஎஸ் பின்வாங்கிவிட்டதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் செம்மலை தெரிவித்துள்ளார். பொதுக்குழுவின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே அதிகம் என்பதால், ஓபிஎஸ் வேறு வழியின்றி வேட்பாளரை வாபஸ் பெற்றுள்ளதாக கூறியுள்ளார்.
அதிமுக வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு நீடித்து வந்த குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் செந்தில் முருகனை வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்போம் என்றும் ஓபிஎஸ் தரப்பு அறிவித்துள்ளது.
இதன் மூலம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த முன்னாள் எம்எல்ஏ தென்னரசு இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. நேற்று அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறவிட்டதாக குற்றம்சாட்டிய ஓபிஎஸ் தரப்பு, இன்று திடீரென வேட்பாளரை வாபஸ் பெற்று ட்விஸ்ட் கொடுத்துள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் திடீர் திருப்பம்: ஓபிஎஸ் அணி வேட்பாளர் அதிரடி வாபஸ்- பரபரக்கும் களம்!
ஓபிஎஸ் பின்வாங்கிவிட்டார்
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் செம்மலை செய்தியாளர்களிடம் கூறுகையில், பெருந்தன்மையோடு ஓபிஎஸ் தரப்பு நடந்திருக்கிறது என்றால், சட்டப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்க கூடாது. இதுவொரு காலம் கடந்த அறிவிப்பாக கருதுகிறோம். ஓபிஎஸ் தரப்புக்கு வேறு வழியில்லை. இதனால் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இரட்டை இலைக்கு ஆதரவு கேட்போம் என்று கூறுகிறார்கள். ஆனால் வேட்பாளருக்கு ஆதரவில்லை என்கிறார்கள்.
ஓபிஎஸ் நடவடிக்கை
நாரதர் கழகம் நன்மையில் முடியும் என்பார்கள். ஆனால் ஓபிஎஸ் தரப்பு செய்து வந்த குழப்பத்திற்கு, அவர்களாலேயே ஒரு முடிவு கிடைத்துள்ளது. அதற்கு காரணம், அவர்களுக்கு வேறு வழியில்லை. இதுதான் முடிவு என்று தெரிந்துகொண்டு , ஓபிஎஸ் தரப்பு பின்வாங்கியுள்ளது. தொடக்கத்தில் இருந்தே ஓபிஎஸ், இரட்டை இலை முடங்க காரணமாக இருக்க மாட்டேன் என்றார். ஆனால் அவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் இரட்டை இலை முடக்கப்படுவதற்கான நடவடிக்கையாகவே இருந்தது.
மீசையில் மண் ஒட்டவில்லை
உச்சநீதிமன்றம் பொதுக்குழு மூலம் வேட்பாளரை தேர்வு செய்ய உத்தரவிட்டதால், ஓபிஎஸ் தரப்பு பின்வாங்கி இருக்கிறது. ஏனென்றால் பொதுக்குழுவின் 95 சதவிகித ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேட்பாளர் தேர்வில் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் ஓபிஎஸ் கலந்துகொள்ளவில்லை. அதேபோல் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வது போல், வேறு வழியின்றி பின்வாங்கி இருக்கிறார்கள்.
இபிஎஸ் அணிக்கே இரட்டை இலை
அதேபோல் இனி வரும் காலங்களிலும் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கே கிடைக்கும். ஏனென்றால் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனின் தேர்வுக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் இயங்குகிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.