ஒரே நேரத்தில் மூவருக்கும் அழைப்பு.. ஓபிஎஸ் போடும் கணக்கு என்ன.. பின்னணியில் யார்?
சென்னை: எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கு ஒரே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வம் இணைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
Recommended Video
சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் வைரமுத்து தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில் அதிமுகவில் ஜூன் 23-க்கு முன் இருந்த நிலையே நீடிக்கும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது. அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.

அன்பு சகோதரர் இபிஎஸ்
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும். அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பதது தான் எங்கள் நிலைப்பாடு. 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, முழு ஒத்துழைப்பு வழங்கினோம். கசப்புகளை மறந்து விட்டு அதிமுக ஒன்று பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். கசப்புகளை மறந்துவிட்டு வாருங்கள். அன்பு சகோதரர் நானும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து சிறப்பாக செயல்பட்டோம். கூட்டுத் தலைமையாக செயல்படுவோம்.
அதிமுகவுக்குள் ஏற்பட்ட பிளவு தான் திமுக ஆட்சிக்கு வர காரணம். இன்றைக்கு அதே சூழல் தான் ஏற்பட்டுள்ளது. டிடிவி தினகரனும், சசிகலாவும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். ஒரே பேட்டியில் அதிமுகவில் இருந்து பிரிந்து செயல்படும் அனைத்து அணிகளுக்கும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 பேருக்கும் அழைப்பு
ஓ.பன்னீர் செல்வத்தின் சமாதான பேச்சுக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதே காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் அதிமுகவுக்கு கூட்டுத் தலைமை தான் சரி என்றதோடு, தொண்டர்களை தன்பக்கம் இழுக்கும் திட்டத்தோடு ஓபிஎஸ் பேசியதாகவும் பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றியணைய அழைப்பு விடுத்த அதே நேரத்தில், சசிகலா மற்றும் தினகரன் ஆகியோருக்கும் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

டெல்லி மேலிடம்
2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுகவுக்கு எதிராக அதிமுக - அமமுக கட்சிகளை இணைக்க பாஜக தரப்பில் முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது சாத்தியப்படவில்லை. அதேபோல் அண்மையில் முடிந்த அமமுக பொதுக்கூட்டத்தில், இரண்டில் ஒரு தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படும் என்று அறிவித்தார். திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து இணைந்து செயல்பட்டும் வரும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி டிடிவி தினகரன் மறைமுகமாக கூறினார்.

இணைப்புக்கு சாத்தியமா?
தற்போது ஓபிஎஸ் பேசும்போது எடப்பாடி பழனிசாமி, சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோருக்கு ஒன்றிணைய அழைப்பு விடுத்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் டெல்லி மேலிடம் பங்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திமுக கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியை பாஜக அமைக்க முயற்சித்து வருவதாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பில் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிரான நிலைப்பாடே இருந்து வருகிறது. ஆனால் அரசியல் எப்போது என்ன மாற்றம் நடக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. அதனால் அதிமுகவின் பல்வேறு அணிகளும் இணைய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications