குரு பெயர்ச்சிக்கு முன் சட்டசபையில் இடம் மாறிய ஓபிஎஸ்.. செந்தில் பாலாஜி நாற்காலி யாருக்கு?
சென்னை: சட்டசபையில் நாற்காலிகள் இடம்மாறியுள்ளன. முன் வரிசையில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது வரிசைக்கு சென்றுள்ளார். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் செந்தில் பாலாஜியின் நாற்காலி வேறொரு அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பின் வரிசைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
குரு பெயர்ச்சி சிலரது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அரசியல், பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு கிரகங்களின் இடப்பெயர்ச்சி அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும். சட்டசபையில் நாற்காலி விவகாரம் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. எதிர்கட்சி துணைத்தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர் செல்வத்தை இடம் மாற்ற வேண்டும் அந்த நாற்காலியை ஆர்.பி உதயகுமாருக்கு தர வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் நீண்ட நாள் கோரிக்கை.

சபாநாயகர் அப்பாவு அதை பரிசீலிக்கவே இல்லை. யாருக்கு எங்கே நாற்காலி ஒதுக்க வேண்டும் என்பது என்னுடைய முடிவுக்கு உட்பட்டது என்று சொல்லி வந்தார் அப்பாவு. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் சட்டசபையில் அருகருகே அமர்ந்திருந்தாலும் பேசாமலேயே அமர்ந்திருப்பார்கள். அது அனைவருக்குமே தர்ம சங்கடம்தான்.
இந்த சூழ்நிலையில்தான் சட்டசபையில் நேற்றைய தினம் எதிர்கட்சி துணைத்தலைவர் இருக்கை மாற்றம் தொடர்பாக சபாநாயகருக்கு கோரிக்கை வைத்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதை ஆதரித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் சபாநாயகர் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உடனடியாக பரிசீலனை செய்வதாக கூறினார் சபாநாயகர் அப்பாவு.
இன்றைய தினம் சட்டசபையில் ஆர்.பி உதயகுமாருக்கு எதிர்கட்சி துணைத்தலைவர் நாற்காலி ஒதுக்கப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமியின் அருகில் அமர்ந்திருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னால் இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2வது வரிசையில் முன்னாள் சட்டசபைத் தலைவர் தனபாலுக்கு அருகில் இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எதிர்கட்சி வரிசையில் 2வது வரிசையில் அமர்ந்திருந்த கே.பி. அன்பழகன் முன் வரிசைக்கு மாறியுள்ளார்.
அதே போல அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததை அடுத்து சட்டசபையில் செந்தில் பாலாஜியின் நாற்காலியும் வேறொரு அமைச்சருக்கு தரப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி வரிசையில் அமைச்சராக இருந்த போது முதல்வர் ஸ்டாலின் நாற்காலிக்கு பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் செந்தில் பாலாஜி. அவர் சிறைக்குப் போன பிறகு இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். சட்டசபையில் அவரது நாற்காலி காலியாவே இருந்தது. இந்த சூழ்நிலையில்தான் இரு தினங்களுக்கு முன்பு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவரது நாற்காலி வேறொரு அமைச்சருக்கு தரப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி பின்னால் உள்ள வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வரும் மே மாதம் குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. குரு பெயர்ச்சிக்கு முன்பாகவே சட்டசபையில் நாற்காலிகளில் இடப்பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. முன்வரிசையில் இருந்தவர்கள் பின் வரிசைக்கும்.. பின் வரிசையில் இருந்தவர்கள் முன் வரிசை நாற்காலிக்கும் இடம்மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications