அரை லிட்டர் ஆவின் பால் 430 கிராம்தான் இருக்குது.. அநியாயம்.. ஆவேசமாக அறிக்கை விட்ட ஓபிஎஸ்
சென்னை: ஆவின் பாலின் எடை குறைந்து இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆவின் பாலின் எடை குறைந்து இருப்பதாக நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது. அரை லிட்டர் பால் எடை 430 கிராம் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டது.
இது சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எடை குறைப்பு
இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த சில நாட்களாகவே ஆவின் பால் அளவு குறைவாக இருக்கின்றது என்று மக்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், அதனை நிரூபிக்கும் விதமாக அரை லிட்டர் பாலுக்குப் பதிலாக 430 கிராம் மட்டுமே இருப்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளதாக வந்துள்ள செய்தி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

430 கிராம்
அதாவது 500 மி.லி. பால் பாக்கெட்டின் அளவை கிராமில் கணக்கிடும்போது 517 கிராம் இருக்க வேண்டுமென்றும், பால் பாக்கெட் இரண்டு கிராம் இருக்க வேண்டும் என்றும், எந்தவிதத்தில் பார்த்தாலும் 1/2 லிட்டர் பாலின் எடை 515 கிராம் இருக்க வேண்டுமென்றும், ஆனால் விற்பனைக்கு வந்த 1/2 லிட்டர் பால் பாக்கெட்டின் எடை 430 கிராம் மட்டுமே இருந்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. இது கடும் கண்டனத்திற்கு உரியது. இதன்மூலம் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு ஈடு செய்யப்படுவதோடு, முக்கியப் புள்ளிகளுக்கு வருவாய் கிடைக்கவும் வழி செய்யப்பட்டிருப்பதாகப் புகார்கள் வந்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன, இதுபோன்ற செயல்கள் மூலம் விலை குறைப்புக்கு முன்பு உள்ள வருவாயை விட விலைக் குறைப்பிற்குப் பின்பு கூடுதலாக வருவாய் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

வேலியே பயிரை மேய்கிறது
இந்தச் சூழ்நிலையில், பாலின் அளவை உறுதி செய்ய வேண்டிய ஆவின் நிர்வாகம், இனி இதுபோன்ற குறைபாடுகள் இருக்காது என்று உறுதி செய்ய வேண்டிய ஆவின் நிர்வாகம், அளவு குறைவாக இருந்தால் மாற்றுப் பால் பாக்கெட் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது நிர்வாகத் திறமையின்மைக்கு, உறுதியற்ற தன்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு. தனியார் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் எடைக் குறைப்பைத் தடுப்பதற்காக அரசு சார்பில் சட்டமுறை எடையளவுக் கட்டுப்பாடு அதிகாரியும், அவருக்குக் கீழ் நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களும் பணிபுரிந்து கொண்டிருக்கின்ற நிலையில், அரசு நிறுவனமே இதுபோன்ற எடைகுறைப்புச் செயல்களில் ஈடுபடுவது வேலியே பயிரை மேய்வது போல் உள்ளது. ஒரு பக்கம் ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு மறுபக்கம் அதனைப் பிடுங்கும் முயற்சியில் அரசு ஈடுபடுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி
இதேபோன்று, அண்மையில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குழுக் கூட்டத்தில், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு ஐந்து விழுக்காடு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஆவின் பொருட்களான மோர், தயிர், லஸ்ஸி ஆகியவற்றின் விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியது. இதன்படி, 10 ரூபாயாக இருந்த 100 மி.லி. கப் தயிர் 12 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

ஜிஎஸ்டி பெயரில் விலையேற்றம்
பத்து ரூபாய் மீது 5 விழுக்காடு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டால். அதன் விலை 10 ரூபாய் 50 காசாகத்தான் உயரும். 12 விழுக்காடு வரி விதிக்கப்பட்டாலும் அதன் விலை 11 ரூபாய் 20 காசாகத்தான் உயரும். ஆனால் 12 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்கும் மேலாக ஆவின் பொருட்களின் விலையை அரசு உயர்த்தியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எத்தனை சதவிகிதம் வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது என்பதில் கூட ஒரு தெளிவற்ற நிலைமை காணப்படுகிறது.
Recommended Video

வலியுறுத்தல்
இதுவும் மக்களை ஏமாற்றும் ஒரு செயல் என தெரிவித்துள்ளார். எனவே ஏழை மக்கள் வாங்கும் ஆவின் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. விதிப்பதை தடுத்து நிறுத்தவும், ஜி.எஸ்.டி. விதிப்பிற்கு மேல் ஆவின் பொருட்கள் விலை உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஓ.பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications