அதிமுகவில் வழிகாட்டு குழுவை ஒபிஎஸ் விரும்புவது ஏன்? திகைப்பில் இபிஎஸ்.. பரபர பின்னணி
சென்னை: அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள காரணம் என்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அதற்கு தயாராகும் விதமாக ஆளும் அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடியின் ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள்.
இதற்கு ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனினும் ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்து, வரும் 7ம் தேதி அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க முயற்சிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக முதல்வர் வேட்பாளர் யோகம் யாருக்கு இருக்கு - இபிஎஸ் ஒபிஎஸ் ஜாதகம் சொல்வதென்ன
காரசார விவாதம்
இதனிடையே 2017ம் ஆண்டு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் முடிவு செய்தபடி 11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என்றும், அந்த குழு தான் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும் என்பதில் ஓ பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது இதன் காரணமாக கடந்த 18ம் தேதி நடந்த செயற்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இடையே காரசார விவாதம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது.
முதல்வர் வேட்பாளர்
இந்நிலையில் அதிமுக நிர்வாகிகள் இதுபற்றி கூறுகையில், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளதால் அதிமுகவின் சார்பில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புகிறார். சசிகலா வந்துவிட்டால் அவருடன் சிலர் சென்றுவிடுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறதாம். இதனால் அதற்கு முன்பாக முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் தேர்தல் செலவுகள் விஷயத்திலும் எடப்பாடியே ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளாராம்.
ஏன் வழிகாட்டுகுழு
அதே நேரம் ஓபிஎஸ் தேர்தல் கணக்கு வேறாக உள்ளதாம். முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க நிபந்தனை விதித்துள்ளாராம். முதல்வர் வேட்பாளர் அறிவிப்பை கையெழுத்து இடும் அதிகாரம் தனக்கே வேண்டும் என்றும் அதற்கு முன்பாக 11 பேர் கொண்ட குழுவை நியமிப்பதற்கான குழுவை முதல் கையெழுத்தாக போடுவேனென்றும் அந்த பரிந்துரையின் பேரில் தான் முதல்வராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட வேண்டும் என்றும், அந்த குழு தான் தேர்தல் தொடர்பான முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்றும் விரும்பவுதாகவும் கூறப்படுகிறது.
ஆதரவாளர்களுக்கு சீட்
ஒபிஎஸ் கணக்குப்படி பார்த்தால் ஓபிஎஸ் தரப்பிலும் ஐந்து பேர் வழிகாட்டுக்குழுவில் 5 பேர் இருப்பார்கள். இதன் மூலம் அதிமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் விவகாரத்தில் தன்னுடைய ஆதரவாளர்களை 60க்கு 40 என்கிற அளவில் போட முடியும். எனவே எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பளராக அறிவித்தாலும் அவருக்கும் அதிகாரம் இருக்கும். அவருடன் ஆதரவாளர்களை தக்க வைக்க முடியும். ஆனால் ஒருவேளை வழிகாட்டுகுழு இல்லாவிட்டால் முதல்வரின் டீம் தான் வேட்பாளர்களை தேர்வு செய்யும் என்பதால் அதிகாரம் குறைந்துவிடும் என்று நினைப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் 11 பேர் குழுவை அமைக்க வேண்டும் என்று ஒபிஎஸ பிடிவாதமாக இருப்பதாக கூறப்பகிறது.
தொடரும் குழப்பம்
ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த கோரிக்கையை தொடர்ந்து நிராகரித்து வருகிறாராம். ஒரு வேளை கையெழுத்து இடும் அதிகாரம் ஒபிஎஸ்க்கு மட்டும் வழங்கப்பட்டால் அதன்பின்னர் கட்சிக்குள் அதிகாரம் செலுத்த முடியாமல் போய்விடும் என்பதால் முதல்வர் ஏற்கவில்லையாம். இதனால் அக்டோபர் 7ம் தேதி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி எந்த சிக்கலும் இல்லாமல் அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.