கைவிட்டது பாஜக... ஓ.பி.எஸ்-ன் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கப் போகும் எடப்பாடி-சசிகலா
சென்னை: அதிமுகவில் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அடிக்கடி ஆடியோ வெளியிடும் சசிகலாவும் அனேகமாக ஓ. பன்னீர்செல்வம் என்னும் மற்றொரு மாஜி முதல்வரின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்காமல் ஓயமாட்டார்கள் என்றே தெரிகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பாஜகவின் தயவால் முதல்வராக்கப்பட்டார் ஓ. பன்னீர்செல்வம். தமக்குப் பின்னால் மத்தியில் ஆளும் பாஜக இருக்கிறது என்கிற அதீத நம்பிக்கையில் இருந்தார் ஓ. பன்னீர்செல்வம்.
ஆனால் அப்போது முதல்வர் பதவிக்கு சசிகலா ஆசைப்பட்டார். இதனால் பதவி பறிபோகிறதே என கொந்தளித்த ஓ. பன்னீர்செல்வம், அதே பாஜகவின் தயவில்தான் தர்மயுத்தம் நடத்தினார். அன்று இதே ஓ. பன்னீர்செல்வத்துக்காகவே சசிகலாவும் பழிவாங்கப்பட்டார்.

பாஜக கன்ட்ரோலில் அதிமுக
ஓ. பன்னீர்செல்வம் எனும் தர்மயுத்த நாயகனை வைத்து அதிமுகவை ஒட்டுமொத்தமாக தம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாஜக. பின்னர் ஓ. பன்னீர்செல்வத்தை துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டு அதிமுகவில் ஐக்கியமாக சொன்னது டெல்லி. இதனையும் ஓபிஎஸ் ஏற்றுக் கொண்டார். பாஜகவின் பேச்சை நம்பி நம்பி ஒவ்வொன்றாக செயல்பட்ட ஓபிஎஸ்-ன் அரசியல் எதிர்காலத்தின் கேள்விக்குறி அன்றே தொடங்கிவிட்டது.

எடப்பாடியின் அதிகஅரம்
என்னதான் துணை முதல்வர் பதவி என்றாலும் அதிகாரம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி வசம்தான் இருந்தது. என்னதான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி என்றாலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே இருந்தனர். இதனால் ரப்பர் ஸ்டாம்ப்பாகத்தான் அதிமுகவிலும் அன்றைய அதிமுக ஆட்சியிலும் ஓபிஎஸ் இருந்தார்.

கண்டுகொள்ளாத பாஜக
சட்டசபை தேர்தலின் போதும் கூட ஓபிஎஸ் எடுத்த எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. சசிகலாவை மீண்டும் சேர்க்க சொன்னார்; அமமுகவை கூட்டணிக்கு கொண்டு வர சொன்னார்; தேமுதிகவை கூட்டணியில் தக்க வைக்க சொன்னார்... தம்முடைய ஆதரவாளர்களுக்கு சரி சமமாக சீட்டு கேட்டுப் பார்த்தார்.. ஆனால் எதனையும் எடப்பாடி கோஷ்டி கண்டு கொள்ளவில்லை. இதைபற்றி பாஜகவும் கவலைப்படாமல் ஒதுங்கிக் கொண்டது.
Recommended Video

தேர்தலுக்குப் பின்னும் ஓபிஎஸ் போராட்டம்
சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் ஜெயிப்பாரா? என்பதே கேள்விக்குறியாகவும் போனது. ஒருவழியாக ஓபிஸ், சட்டசபை தேர்தலில் வென்றார். ஆனாலும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான ரேஸில் மீண்டும் எடப்பாடி பழனிசாமியிடம் தோற்றுப் போனார். அதேபோல் சட்டசபைக்கான நிர்வாகிகள் நியமனத்திலும் ஓபிஎஸ் படுதோல்வியைத்தான் தழுவினார். இப்போதைய நிலையில் அதிமுக என்பது எடப்பாடி பழனிசாமியின் கட்சியாகவே உருமாறிவிட்டது.

சசிகலா ஆடியோக்கள்
இப்போதுள்ள நிலையில் ஓபிஎஸ்-க்கு எங்கே சிக்கல் வருகிறது? எந்த சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்த்தால் தாம் இழந்து போன பதவி, பவுசு அனைத்தும் கிடைக்கும் என நினைக்கிறாரோ அதே சசிகலாவால்தான் ஓபிஎஸ் தனிமரமாகக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதிமுகவில் சசிகலாவுடன் தொடர்பு உள்ள அத்தனை பேரையும் நீக்கிக் கொண்டே வருகிறார்கள். இதனை அக்கட்சி அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறது. இது ஓபிஎஸ் தமக்கு தாமே வெட்டிக் கொண்ட குழியாகவே பார்க்கப்படுகிறது.

ஓபிஎஸ்-க்கு சிக்கல்?
இந்த நிமிடம் வரை சசிகலா தம்மை காப்பாற்ற அதிமுகவுக்குள் அதிரடியாக நுழைவார் என்பது ஓபிஎஸ் எதிர்பார்ப்பு. அப்படி சசிகலா தடலாடியாக ஏதேனும் செய்யக் கூடும் என்கிற சிறிய சந்தேகம் எடப்பாடி பழனிசாமி அணிக்கு வந்தாலே போதும்... அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் நீக்கப்படுவது உறுதியாகிவிடும். அப்போது ஓ.பி.எஸ்.க்கு ஆதரவாக பாஜகவும் சசிகலாவும் நிச்சயம் வரப்போவது இல்லை. ஓ.பி.எஸ். என்னும் மாஜி முதல்வர் நிச்சயம் தனிமரமாக அரசியல் எதிர்காலத்தை தொலைத்தவராக இருக்கப் போகிறார் என்பது மட்டும் நிச்சயம் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications