மூன்று முறை 'சிஎம்' சார் அவரு.. பிரதமருடனான சந்திப்பு.. நோகடித்த நெட்டிசன்களை அதிர வைத்த ஓபிஎஸ்
சென்னை: மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ்ஸுக்கு வந்த இந்த சோதனை மிகவும் மோசமானது. அவர் நேற்று திருச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது உண்மை தானா என்று சிலர் கேள்வி கேட்டு நோகடித்தனர். இதனிடையே அவர்களுக்கு எல்லாம் ஓபிஎஸ் அதிரடியான பதிலை அளித்து அதிர வைத்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 4 ஆண்டுகள் சேர்ந்து ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம், 2021 சட்டசபை தேர்தலுக்கு பிறகு பிரிந்தனர். ஒற்றை தலைமை பிரச்சனையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பெரும்பாலான நிர்வாகிகள் ஒன்று திரண்டதால் அதிமுக இரண்டாக உடைந்தது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓ பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது.

அதிமுகவின் பெரும்பாலான நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருந்த நிலையில், பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி அதிமுகவை கைப்பற்றி செயல்பட்டு வருகிறது. அதேநேரம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடன் எம்எல்ஏக்கள் சிலர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் சிலர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இதையடுத்து அவர் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.அவர்கள் தற்போது நீதிமன்ற உத்தரவு காரணமாக அதிமுக என்ற அடையாளத்தை பயன்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது. வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.
இதனிடையே அதிமுக பொதுச்செயலாளராக மாறி, ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி உருவெடுத்த பின்னர், பாஜக உடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, 2026 சட்டசபை தேர்தலிலும் பாஜக உடன் கூட்டணி இல்லை என்பதை அதிமுக தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
அதேநேரம் ஓ பன்னீர்செல்வமோ பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். பாஜகவிற்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை பேசி வருகிறார். இந்தநிலையில் திருச்சியில் புதிய விமான முனையத்தை திறக்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று வருகை தந்தார். அப்போது விமான நிலையத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து பிரதமர் மோடியை வரவேற்றார். மேலும் பிரதமர் மோடியிடம் சில நிமிடங்கள் அவர் பேசியதாக வும் சொல்லப்படுகிறது. இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் உடன் இருந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருச்சி சென்று பிரதமர் நரேந்திர மோடியை பார்க்கவில்லை.. பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த பின்னர், பாஜக உடன் மென்மையான போக்கை எடப்பாடி பழனிசாமி கடைபிடித்து வருவதாக திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பிரதமர் மோடியை தேடிப்போய் சந்திப்பதை எடப்பாடி தவிர்த்துவிட்டார்.
இந்த சூழலில் ஓ பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.. ஓ பன்னீர்செல்வமோ தனது ட்விட்டரில் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு குறித்த புகைப்படத்தை வெளியிடவில்லை. இதனிடையே பிரதமரை ஓ பன்னீர்செல்வம் சந்தித்தாரா இல்லையா என்று சிலர் கேள்வி எழுப்பினார்கள். மூன்று முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ்சை இந்த கேள்விகளால் சிலர் நோகடித்துவிட்டனர்.
இதனிடையே ஓ பன்னீர்செல்வம் பிரதமர் மோடி சந்திப்பு குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. பிரதமரை சந்தித்தது குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய ஓபிஎஸ், "திருச்சி வருகை தந்த பிரதமரிடம் அரசியல் பேசவில்லை, பிரதமரை வரவேற்று வழி அனுப்பவே திருச்சி சென்றேன். என் உடல் நலம் குறித்து விசாரித்தார். அழைப்பு வந்தால் டெல்லி சென்று பிரதமரை சந்திப்பேன்" என்றார்.












Click it and Unblock the Notifications