ஸ்டாலின் அறிவிப்புக்கு ஓபிஎஸ் பாராட்டு... இபிஎஸ் கப்சிப்.. ஒன்றல்ல.. இது மூன்றாவது முறை!
சென்னை : பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக கொண்டாடப்படும் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்பை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார். இதேபோல் திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் அறிவிப்புகளை எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற போதிலும் ஓ பன்னீர்செல்வம் வரவேற்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி இதுவரை எந்த கருத்தும் தெரிவித்தது கிடையாது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட 14 அறிவிப்பில், மகாகவி பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், அரசின் சார்பில் இனி ஆண்டுதோறும் 'மகாகவி நாளாக. கடைபிடிக்கப்படும். இதனையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதைப் போட்டி நடத்தி ' பாரதி இளங்கவிஞர் விருது' மாணவன் ஒருவருக்கும், மாணவி ஒருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும்.
பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாசு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் கமார் 37 லட்சம் பேருக்கு 10 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

பெரியார் பிறந்த நாள்
முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சி துணை தலைவரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தந்தை பெரியாரின் பிறந்த நாள் "சமூகநீதி" நாளாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் அறிவித்தபோது, அதனை நான் வரவேற்றேன்.

ஓபிஎஸ் பாராட்டு
இந்திய விடுதலைக்கு முன், மொழிப் பற்றினையும், நாட்டுப் பற்றிளையும், ஒருமைப்பாட்டினையும், காவேரி போல் பெருக்கெடுத்து ஓடும் தன் பாட்டுத் திறத்தால், கவிதை நயத்தால் உணர்த்தி, உறங்கிக் கிடக்கும் மக்களைத் தட்டி எழுப்பி, விடுதலை உணர்வினை ஊட்டிய மகாகவி பாரதியாரோடு ஒப்பிட்டு தமிழ்நாட்டில் சமுதாய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள் என்று கூறியிருந்தேன்.

மகாகவி நாள்
இந்த நிலையில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு தினத்தையொட்டி, பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நான் "மகாகவி" நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது அனைவரும் வரவேற்கக்கூடிய ஒன்று. தமிழ் மொழியின் சிறப்பினை உலகிற்கு உணர்த்திய கவிஞர் மகாகவி பாரதியார். மொழிப்பற்று உடையனே நாட்டுப்பற்று உடையவனாய் ஊழ இயலும் என்பதை மெய்ப்பித்துக் காட்டியவர் மகாகவி பாரதியார். விடுதலைப் பாடல்களால் தமிழகத்தை வீறுபெறச் செய்தவர் மகாகவி பாதியார்.

பாரதியார் யார்
பாரதி ஒரு பன்மொழிப் புலவர். ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு, இந்தி என பலமொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார். பல மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்த பாரதி, 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்" எனப் பாடினார் என்றால், அந்த அளவுக்கு உயர்ந்த மொழி தமிழ் மொழி என்பது தான் அதன் உள்ளார்ந்த பொருள். தமிழ் மொழியின் சிறப்பையும், உயர்வையும் கூறி இளைஞர்களின் உள்ளங்களில் இன்றளவிலும் சிப்மாசனமிட்டு இருப்பவர் பாரதியார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் சிலகாலம் தமிழ் ஆசிரியராக பணியாற்றிய பாரதி. பல செய்தி இதழ்களையும் நடத்திய பெருமைக்குரியவர்.

ஸ்டாலினுக்கு நன்றி
'ஏழை என்றும், அடிமை என்றும், எவனும் இல்லை சாதியில்' என்று பாடிய புரட்சிக் குயில் பாரதியின் நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் நாள் | மகாகவி நாளாக அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று அறிவித்ததோடு, பாரதியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் மற்றும் கட்டுரைகளைத் தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகத்தை மாணவ, மாணவியருக்கு வழங்குதல்; பாரதியின் உருவச் சிலைகள், உருவம் பொறித்த கலைப் பொருட்களை பூம்புகார் நிறுவனத்தின் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்தல்; பாரதி குறித்த நிகழ்வுகளை பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நடத்துதல்; 'திரையில் பாரதி' என்ற நிகழ்வினை நடத்துதல்; திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியின் பெயரில் இருக்கை அமைத்தல்; உத்தரப் பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பராமரிக்க அரசு சார்பில் நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பதினான்கு அறிவிப்புகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்புகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்பதோடு, இந்த அறிவிப்புகளை வெளியிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

ஓபிஎஸ் பேச்சு
இதனிடையே அண்மையில் கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்ற அறிவிப்பை ஓபிஎஸ் வரவேற்றார். இதுகுறித்து சட்டசபையில் ஓபிஎஸ் கூறும்போது, "கலைஞரின் வசனத்தில் அனல் பறக்கும்.. பின்னடைவில் உள்ள சமூகத்தை முன்னேற்ற அது எப்போதும் துணை நின்றுள்ளது... என்னுடைய அப்பா தீவிரமான கலைஞரின் பக்தர்.

வரவேற்ற ஓ பன்னீர்செல்வம்
அவருடைய பெட்டியில் மனோகரா, பராசக்தி கதைகள்தான் இருக்கும்... அதையெல்லாம் மனப்பாடமாக ஒப்பிப்பார்.. அவர் இல்லாத நேரத்தில் நாங்கள் எடுத்து அந்த வசனங்களை படித்துள்ளோம்... கலைஞருக்கு நினைவிடம் என்ற வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி... வரலாற்றில் கலைஞரின் பெயர் நிலைத்து நிற்கும். முழுமனதோடு ஒருமனதாக வரவேற்கிறோம்" என்று கூறியிருந்தார்.

கருத்துக்கள் இல்லை
இதனிடையே ஓபிஎஸ் துக்க நிகழ்வில் இருந்தாலும் பாரதியார் , பெரியார், கலைஞர் நினைவிடம் என ஒவ்வொரு விஷயங்களுக்கும் பொறுப்புள்ள தலைவராக ஓ பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்து வருகிறார். ஆனால் எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இதுவரை பாரதியார் நினைவு தின அறிவிப்பாகட்டும், பெரியார் சமூக நீதி நாள் அறிவிப்பாகட்டும் எதற்குமே கருத்து சொல்லவில்லை. அரசியல் கட்சி தலைவர்கள் ஒவ்வொரு விவகாரம் குறித்து தங்கள் கருத்துக்களை வெளியிடுவது இப்போது வழக்கமாகி வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ அமைதியை கடைபிடித்து வருவதால் அவரது நிலைப்பாடு என்ன என்பது தெரியாமலேயே இருக்கிறது.












Click it and Unblock the Notifications