Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்க்கட்சியாக இருந்தபோது வீரவசனம்.. ஆட்சிக்கு வந்த பிறகு அடக்குமுறையா? - ஓபிஎஸ் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : உரிமை, கடமை என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வீரவசனம் பேசிவிட்டு, முதலமைச்சராக வந்தவுடன் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவது நியாயமா என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசை விமர்சித்துள்ளார்.

கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் அரசு மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தபோது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவோம் என்று வாக்குறுதியளித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், இதுவரை மருத்துவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் இருப்பது பற்றி அரசு மருத்துவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல் அவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது திமுக அரசு எனச் சாடியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

விரக்தியின் உச்சத்தை நோக்கி

விரக்தியின் உச்சத்தை நோக்கி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தின் நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட தேர்தல் அறிக்கை என்று கூறி, அதை மக்களிடம் பரப்பி, அவற்றை உடனடியாக நிறைவேற்றுவோம் என்பது போல மேடைக்கு மேடை நாடகமாடி, அதன்மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க, இன்று தமிழ்நாட்டு மக்களின் வருங்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், விடியலை நோக்கி என்று சொல்லிவிட்டு விரக்தியின் உச்சத்திற்கு அனைத்துத் தரப்பினரையும் தி.மு.க அரசு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது.

பழிவாங்கல்

பழிவாங்கல்

தேர்தல் வாக்குறுதிகளுக்கு முற்றிலும் முரணான வகையில் சொத்து வரியை உயர்த்திய தி.மு.க அரசு, மின்சார கட்டணத்தை உயர்த்திய தி.மு.க அரசு, பால் மற்றும் பால் பொருட்களின் விலையை உயர்த்தி தி.மு.க அரசு, தற்போது அரசு மருத்துவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல் அவர்களை பழிவாங்கிக் கொண்டிருக்கிறது. "திராவிட மாடல்" என்று சொல்லிக் கொண்டு, "பாசிச மாடல்" அரசை தி.மு.க அரசு நடத்திக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகிறது. தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு காலவரையற்ற போராட்டம் நடத்தியபோது, சில மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மேற்கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது

அப்போது, போராட்டக் களத்தில் உள்ள மருத்துவர்களை நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவினை தெரிவித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். ஆதரவு தெரிவித்ததோடு நின்றுவிடாமல், தி.மு.க ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்ற உத்தரவாதத்தையும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் தெரிவித்தார். மேலும், போராடுவது அவர்களுடைய உரிமை மற்றும் கடமை என்றும், அவர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

 காது கொடுத்து கேட்கக் கூட

காது கொடுத்து கேட்கக் கூட

இன்று, தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அரசு மருத்துவர்களுடைய கோரிக்கையினை செவி கொடுத்துக் கூட கேட்க அரசு தயாராக இல்லை என்று செய்திகள் வருகின்றன. அவர்களுடைய கோரிக்கையே முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில், 2009 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 354-ஐ அமல்படுத்த வேண்டும் என்பதுதான். இதைக்கூட தி.மு.க அரசிற்கு நிறைவேற்ற மனமில்லை. மாறாக, பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அண்மையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, வள்ளுவர்க் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக அரசு மருத்துவர்கள் மேற்கொண்டதாகவும், வருகின்ற 30-ஆம் தேதி மவுனப் போராட்டம் நடத்த உத்தேசித்து இருந்ததாகவும், இந்தச் சூழ்நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கையினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்காமல், போராட்டக் குழுவின் நிர்வாகிகள்மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

அடக்குமுறையை ஏவிவிடுவது நியாயமா?

அடக்குமுறையை ஏவிவிடுவது நியாயமா?

போராடுவது அவர்களது உரிமை, கடமை என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வீரவசனம் பேசிவிட்டு, முதலமைச்சராக வந்தவுடன் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவது நியாயமா என்பதை முதலமைச்சர் அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதற்குப் பெயர்தான் "சொன்னதை செய்வோம்" என்பதா? தி.மு.க அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு அஇஅதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். போராட்டக் குழு நிர்வாகிகள் மீது எடுக்கப்பட்டுள்ள பழிவாங்கும் நடவடிக்கையினை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்றும் முதலமைச்சர் ஸ்டாலினை கேட்டுக் கொள்வதோடு, கொடுங்கோல் ஆட்சி நீண்டநாள் நீடிக்காது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+