ஓபிஎஸ் மகனுக்கு சீட் தந்தாலும் சிக்கல்.. தராவிட்டாலும் சிக்கல்.. தேனி அதிமுகவுக்கு வந்த சோதனை
தேனி தொகுதியில் ஓபி ரவீந்திரநாத் போட்டியிட போவதாக தகவல்கள் வருகின்றன.
Recommended Video

சென்னை: ஓபிஎஸ் மகன் ஓபிஆர் தேனி மாவட்டத்தில் வெற்றி பெற்று மீண்டு வருவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
துணை முதல்வர் ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் இளைஞர் இளம் பெண் பாசறையின் தேனி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்மூலம் அவர் அரசியல்
களத்தில் குதித்து மாவட்ட அளவில் அரசியல் செய்து வந்தார்.
ஆனால் திடீரென அவரிடமிருந்துபதவியை ஜெயலலிதா பறித்து விட்டார். என்றாலும் இவரை தனக்கு பின் கட்சிக்குள் கொண்டு வந்து எப்படியாவது அரசியல் வாரிசாக உருவாக்கி விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார் ஓபிஎஸ். தற்போது இவருக்கு கட்சியில் பொறுப்பும் வழங்கப்பட்டது.

போஸ்டர்
சமீபத்தில்கூட தேனி மாவட்டத்தில் "தாயின் தலைமகனாரின் நற்பணி இயக்கம்" என்ற பெயரில் ஓபிஎஸ்-க்கு அவரது ஆதரவாளர்கள் நற்பணி மன்றம் தொடங்கினார்கள். இது சம்பந்தமாக ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். இதில் ரவீந்திரநாத் படமும் இடம் பெற்றது. ஆனால் ஒரு இடத்திலும், ஒரு போஸ்டரிலும் கூட முதல்வர் எடப்பாடி பழனிசாமி படம் இல்லை. இதனால் தேனி மாவட்டத்தில் எடப்பாடியை டம்மி என்ற பெயர் உருவாகி வருகிறது.
செல்வாக்கு
ஏற்கனவே அரசியல் விவகாரங்களில் முதல்வர், துணை முதல்வர் இடையே நிழல் யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, தேனி மாவட்டத்தில் மொத்தமாகவே முதல்வரின் செல்வாக்கை காலி செய்யும் பணியில் ஓபிஎஸ் குடும்பம் ஈடுபட்டு வருவதாக சொல்லப்பட்டது. இந்நிலையில்தான் வரும் தேர்தலில் ஓபிஆர் களத்தில் இறங்க போகிறார் என்கிறார்கள்.

ஐ.பெரியசாமி
தேனி, பெரியகுளம் உள்ளிட்ட பல பகதிகளில் இவருக்கு செல்வாக்கு, பணபலம், ஆள் பலம் இருக்கிறது. இதில் இனி கூட்டணியில் இணைய உள்ள தேமுதிக ரசிகர்களும் இவருக்கு ஆதரவாக இறங்கி வெற்றி பெற வைக்கும் முடிவில் இருக்கிறார்கள். ஆனால் இதில் 2 பேர் திமுக தரப்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒருவர், திமுக மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் கம்பம் ராமகிருஷணன். இவர் ஐ. பெரியசாமியின் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் ரெகமண்டேஷன் ஸ்ட்ராங்காக உள்ளது.

கம்பம் ராமகிருஷ்ணன்
அதேபோல, இன்னொருவர் பெரியகுளத்தை சேர்ந்த ஸ்டாலின் குணசேகரன். இவர் ஒரு தீவிர திமுக விசுவாசி. குணசேகரன் என்ற பெயரை ஸ்டாலின் மீதுள்ள பற்றினால் குணசேகரன் ஸ்டாலின் என்றே மாற்றி கொண்டவர். தொகுதியில் மக்களின் செல்வாக்கை பெற்றவர். இவரையே நிறுத்த வேண்டும் என்று தொகுதி மக்களே ஆசைப்படுகிறார்கள். அதனால் திமுக கம்பம் ராமகிருஷ்ணன், ஸ்டாலின் குணசேகரன் இவர்களில் ஒருவருக்கு சீட் வழங்கப்படலாம் எனதெரிகிறது.

அதிமுக திட்டம்
ஆனால் விஷயம் என்னவென்றால், இவர்களில் திமுக யாரை நிறுத்தினாலும் அவர்களுக்கு மறைமுகமான ஆதரவை தெரிவிக்க அதிமுகவே முடிவு செய்துள்ளதாம். ஓபிஆரை வரவிடாமல் தடுக்கும் முயற்சியில் அதிமுகவின் ஒருதரப்பு உள்ளடி வேலையில் இறங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

ஓபிஎஸ் பிடிவாதம்
சில தினங்களுக்கு முன்பு தன்னையே எதிர்க்க துணிந்த ஓ.ராஜாவுக்கு சீட்டு தந்தால் பின்னாளில் எந்த பிரச்சனை வேண்டுமானாலும் வரும் என்பதால், அவரை தேர்தலில் முன்னிறுத்த ஓபிஎஸ் விரும்பவில்லை அதனால்தான் மகனுக்காவது சீட் வாங்கி டெல்லிக்கு அனுப்பிவிட வேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறார். அதற்காக இதுவரை இல்லாத அளவுக்கு தேனி மாவட்டத்தில் பண மழை பொழிய வைக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

இடியாப்ப சிக்கல்
ஆனால் ஓபிஆருக்கு அதிமுக சீட் தராமல் போய்விட்டாலும் அதை ஓபிஎஸ் லேசில் விடமாட்டார் என்கிறார்கள். அதிமுக சார்பாக யார் நிறுத்தப்பட்டாலும் அவருக்கு எதிராகவே இறங்கி தோற்கடிக்கும் வேலையில் இறங்கி விடுவார் என கூறப்படுகிறது. அதனால் இப்போதைக்கு உச்சக்கட்ட பிரச்சனை என்னவென்றால், ஓபிருக்கு சீட் தந்தாலும் சரி, தராவிட்டாலும் சரி சிக்கல் என்னவோ அதிமுகவுக்குதான் என்ற நிலை ஏற்பட்டுள்ளது! இந்த இடியாப்ப சிக்கலிலிருந்து மீண்டு வருவாரா ஓபிஎஸ் மகன் ஓபிஆர்!!












Click it and Unblock the Notifications