திருவொற்றியூரில் ஆலிவ் ரிட்லி ஆமை, ராமேஸ்வரம் கடலில் திமிங்கலம்! தொடர்ந்து பலியாகும் கடல் உயிர்கள்
சென்னை: திருவொற்றியூர் கடற்கரையில் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமையும், ராமேஸ்வரம் கடல் கரையில் திமிங்கலம் ஒன்றும் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் சூழலியல் ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பூமி மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது கிடையாது. ஆனால் சமீப காலமாக இதனை மறந்து மனிதர்கள் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் சூழலியலை கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக கடல் வாழ் உயிரினங்களின் அழிவுக்கு இது இட்டுச் சென்றிருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட உயிரினம் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள்தான். சாதாரண மீன்பிடி படகுகள் மூலம் ஆமைகளுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் இழு வலையை பயன்படுத்தும் பெரிய கப்பல்கள் இந்த ஆமைகளின் அழிவுக்கு காரணமாக இருக்கிறது.

இழு வலை மீன்களோடு சேர்த்து ஆமைகளையும் இழுத்து வந்துவிடுகிறது. ஆமைக்கள் வலையிலிருந்து விடுவிக்கப்படுவதற்கு முன்பே அவை இறந்துவிடுகின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக TED எனப்படும் ஆமைகளை விடுவிக்கும் கருவிகளை நவீன மீன்பிடி படகுகளில் பொதுத்த வேண்டும் என்று மேலை நாடுகளில் சட்டமே இருக்கிறது. ஆனாலும் இது எதிர்பார்த்த அளவுக்கு பலனை கொடுக்கவில்லை. வலைகள் தவிர, படகுகளின் என்ஜின் இறக்கைகள் மோதுவதாலும் ஆமைகள் இறந்துவிடுகிறது.
மேலும் ஒளி மாசு ஆமைகளின் எண்ணிக்கை குறைவுக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. ஆலிவ் ஆமைகள் கடற்கரையில் முட்டைகளை இடுகின்றன. முட்டைகளிலிருந்து வெளிவரும் குட்டி ஆமைகளால் தலையை உயர்த்தி பார்க்க முடியாது. கரையிலிருந்து பார்க்கும்போது கடல்தான் ஒளிமிக்க பகுதியாக தெரியும். கடல் சூரிய ஒளியை/நிலவின் ஒளியை எதிரொலிப்பதால் அப்படி தெரிகிறது. ஒளிமிக்க பகுதி எதுவோ அதை நோக்கிதான் பயணிக்க வேண்டும் என்பது ஆமைகளின் மரபணுவில் காலம் காலமாக கடத்தப்பட்ட ஒரு தகவல்.
எனவேதான் ஆமை குஞ்சுகள் பொறிந்தவுடன் கடலை நோக்கி பயணிக்கின்றன. ஆனால் தற்போது கடற்கரையில் சொகுசு விடுதிகள் உள்ளிட்டவை அதிகரித்துவிட்டன. எனவே ஆமைகள் தனது பாதையை மாற்றி நிலப்பரப்புக்கு வந்து உயிரிழந்துவிடுகிறது. டைனோசருக்கு முன்பிருந்து வாழ்ந்து வந்த இந்த ஆமை இனங்கள் மனித நடவடிக்கைகளால் அழிந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளதாக சூழலியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஆமையின் ஆயுள் இப்படி முடிகிறது என்றால், மறுபுறம் திமிங்கலங்களின் கதை சற்று வித்தியாசமானது.
இது அளவில் பெரிய உருவாமாக இருந்தாலும், இதனால் பெரிய சைஸில் உள்ள உயிரினங்களை சாப்பிட முடியாது. அதை துண்டு துண்டாக கிழித்துதான் சாப்பிட முடியும். அல்லது சிறி சிறிய மீன்களைதான் சாப்பிட முடியும். ஆனால் கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை சிறிய மீன்கள் சாப்பிடுவதும், அந்த மீன்களை திமிங்கலங்கள் சாப்பிடுவதன் மூலம் அதன் ஆயுளுக்கு முடிவுரை எழுதப்படுகிறது.
இப்படி தொடர்ந்து கடல்வாழ் உயிர்கள் பாதிப்புக்கு உள்ளாவது, அதை சார்ந்து இருக்கும் சூழலையும், மனிதர்களையும் கூட விரைவில் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு நடுவில்தான் திருவொற்றியூர் கடற்கரையில் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமையும், ராமேஸ்வரம் கடல் கரையில் திமிங்கலம் ஒன்றும் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications