தமிழகத்தில் ஓமிக்ரான் சமூக பரவலாக மாறுகிறது.. மா.சுப்ரமணியன் எச்சரிக்கை
தமிழகத்தில் 97 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் ஓமிக்ரான் சமூகப் பரவலாக மாறிவருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் 97 பேருக்கு ஓமிக்ரான் அறிகுறி தென்பட்டுள்ளதாகவும்
ஓமிக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவதாகவும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார். இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி 31ஆம் தேதி முடிவெடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் வைரஸ் தொற்று இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. தற்போதுவரை 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 600 க்கும் மேற்பட்டோருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், ஹரியானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஓமிக்ரான் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி வரும் 31ஆம் தேதி முடிவெடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மருத்துவக்குழு ஆய்வு
ஓமிக்ரான் தொற்று பாதிப்பு உள்ள கேரளா, மகாராஷ்டிரா,தமிழ்நாடு, மேற்கு வங்கம், மிசோரம், கர்நாடகா, பீகார், உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்களுக்கு மத்தியக்குழுவினர் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். டாக்டர் வனிதா,புர்பசா,சந்தோஷ் குமார்,தினேஷ் பாபு ஆகிய நான்கு போ் கொண்ட மத்திய மருத்துவ குழுவினா் தமிழகத்திற்கு வந்துள்ளனர்.

அமைச்சர் மா.சுப்ரமணியன்
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டனர். ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மாவட்ட வாரியாக சுகாதாரத் துறை இணை இயக்குநர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

3 நாட்கள் ஆய்வு
தேனாம்பேட்டையில் உள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடம், கட்டளை மையம், தடுப்பூசி சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை நிபுணர்கள் பார்வையிட்டனர். பின்னர், கூடுவாஞ்சேரி சென்ற குழுவினர், தடுப்பூசி மையம், கொரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். சென்னை விமான நிலையத்தில் பரிசோதனைக்கான ஏற்பாடுகள், கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை வசதிகள் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

தமிழக அரசு கோரிக்கை
தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனம், ஊட்டியில் உள்ள பாஸ்டர் நிறுவனம் ஆகியவற்றில் தடுப்பூசி தயாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டதாக தெரிவித்தார். ஓமிக்ரான் தொற்றை உறுதிசெய்ய தமிழகத்தில் உள்ள மரபியல் ஆய்வுக்கூடத்தை பயன்படுத்த அனுமதிக்குமாறு மத்திய குழுவினரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

தாமதமாகும் பரிசோதனை முடிவு
தமிழகத்தில் 97 பேருக்கு ஒமைக்ரான் தொற்றுக்கான மரபணு மாற்றம் கண்டறியப்பட்டிருப்பதாகவும், ஒமைக்ரான் பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் பாதிக்கப்பட்டவர் டிஸ்சார்ஜ் ஆகும் நிலை இருப்பதாகவும் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

எத்தனை பேர் குணம்
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் இருந்து ஓமிக்ரான் ஏற்படுவது என்ற நிலைமாறி, சமூக பரவல் என்ற நிலையை எட்டியிருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 34 பேரில், 18 பேர் குணமடைந்திருப்பதாகவும், 16 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications